டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு முதல் டோல்கேட்களில் மீண்டும் கட்டணம் வசூல்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: நெடுஞ்சாலை டோல் கேட்களில் டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. இதையடுத்து நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டு, பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

இதை தவிர்ப்பதற்காக, சுங்க கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக டிசம்பர் 2ம் தேதிவரை, ரத்து செய்தது மத்திய அரசு. எனவே தற்போது வாகனங்கள் சுங்கம் செலுத்தாமலேயே, வேகமாக பயணிக்க முடிகிறது.
இந்நிலையில், மீண்டும் டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவு முதல் வசூலிப்பதாக மத்திய அரசு புதன்கிழமையான இன்று அறிவித்துள்ளது. டோல் கட்டணம் பெறுவதை மத்திய அரசு தள்ளிப்போடும் என நினைத்திருந்த வாகன ஓட்டிகளுக்கு இதனால் அதிர்ச்சி.
பணப் புழக்கம் நிலைமை சீரடைந்து விட்டதாக நினைத்து சுங்கக்கட்டணம் வசூலை நெடுஞ்சாலைதுறை தொடங்குகிறது. மேலும், டிசம்பர் 15ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு சில்லரை போதிய அளவுக்கு டோல்கேட்டுகளில் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. அவ்வாறு கிடைக்காதபட்சத்தில், மீண்டும் நீண்ட கியூவில் நிற்க வேண்டிவரும். எனவே சரியான சில்லரையை கொண்டு செல்லுமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications