சிறப்பு அந்தஸ்து கோரி பீகார், ஜார்க்கண்டில் முழு அடைப்புப் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. முதலமைச்சர் நிதிஷ் குமார் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சீமாந்திராவுக்கு சிறப்பு பொருளாதாரச் சலுகைகளை வழங்குவது போன்று பீகார் மாநிலத்திற்கும் வழங்க வேண்டும் என்பது ஐக்கிய ஜனதா தளத்தின் கோரிக்கை. இந்த போராட்டம் காரணமாக தலைநகர் பாட்னா உட்பட பல்வேறு இடங்களில் ஐக்கிய ஜனதா தள கட்சித் தொண்டர்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. ரயில், பேருந்து சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு எதிர்க்கட்சிகளான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன் கட்சியும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியும் தனித்தனியே முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் அங்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தொழிற்சாலை நகரமான ஜாம்ஷெட்பூரில் சாலைகளில் டயர்களை கொளுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது.