தமிழில் பேச அனுமதி கேட்க வேண்டிருக்கிறதே... லோக்சபாவில் தம்பித்துரை வேதனை
லோக்சபா, ராஜ்யசபாவில் தமிழில் பேச அனுமதி கேட்க வேண்டியிருக்கிறதே என்று எம்.பி தம்பித்துரை வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தமிழில் பேசிய அதிமுக எம்.பி தம்பித்துரைக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அவர், தமிழில் பேச அனுமதி பெறவேண்டியிருக்கிறதே என்று ஆதங்கப்பட்டார்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கிய பங்கு வகித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடாளுமன்றத்தில் கூட்டு கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் தம்பித்துரை, தமிழில் தனது உரையை ஆரம்பித்தார். இந்திய சுதந்திர போராட்டத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பெரும்பாலான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர் என்றார்.
சுதந்திரம் பெருவதற்கான வெள்ளையனே வெளியேறு என்று குரல் எழுப்பிய போது பலரும் பங்கேற்று தங்களின் உயிரை மாய்த்தனர் என்றனர்.
அப்போது பாஜக எம்பிக்கள் குரல் கொடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனும், இது பற்றி நீங்கள் முன்னரே அனுமதி பெறவில்லையே என்றார்.
அதற்கு பதிலளித்த தம்பித்துரையோ, தமிழில் பேச வேண்டும் என்றால் அனுமதி கோர வேண்டிய நிலை உள்ளது என்றும் பிற உறுப்பினர்கள் பேசும் போது இந்தி அல்லது ஆங்கில மொழி பெயர்ப்பையே தமிழக எம்.பி.க்கள் கேட்கும் நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும், தமக்கு மட்டுமல்ல பிற மாநில மொழி பேசுபவர்களும் இதே நிலையைதான் எதிர்கொள்வதாக தம்பிதுரை தெரிவித்தார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் உடனடி மொழி பெயர்ப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுமித்ரா மகாஜன் கூறினார்.