நாரதா லஞ்ச வழக்கு: சுவேந்து அதிகாரி, முகுல்ராய் ஏன் கைதாகவில்லை? கைதான திரிணாமுல் எம்.எல்.ஏ. கேள்வி
கொல்கத்தா: நாரதா லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாங்கள் குற்றவாளிகள். ஆனால் சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகிய இருவரும் நல்லவர்களாம் என்று திரிணாமுல் எம்.எல்.ஏ மதன் மித்ரா கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் போலி நிறுவனங்களுக்குச் சாதமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நாரதா என்ற செய்தி இணையதளம் செய்திகளை வெளியிட்டிருந்தது.

நாரதா லஞ்ச வழக்கு
போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாக செயல்பட ஆளும் திரிணமூல் காங்கிரஸின் 7 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள் லஞ்சம் பெற்றது அம்பலமானது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன் மித்ரா மற்றும் முன்னாள் அமைச்சர் சோவன் சட்டர்ஜி ஆகிய 4 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

மம்தா தர்ணா
இந்த 4 பெரும் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்காவிட்டால் தன்னையும் கைது செய்யுமாறு கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சி.பி.ஐ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திரிணாமுல் காங்கிரசின் தொண்டர்கள் ஆவேசமடைந்து சிபிஐ அலுவலகத்தில் கல்வீசி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவேந்து அதிகாரி மீது குற்றச்சாட்டு
நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் அப்போது திரிணாமுல் காங்கிரசில் இருந்த சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தற்போது சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோர் பாஜகவில் இருப்பதால் இருவரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதே கேள்வியை தற்போது கைது செய்யப்பட்டுள்ள மதன் மித்ரா எழுப்பி உள்ளார்.

தவறு செய்யவில்லை
இது தொடர்பாக மதன் மித்ரா கூறுபர்களிடம் கூறுகையில், ''என் படுக்கையறைக்குள் நுழைந்து என்னை சி.பி.ஐ. கைது செய்த அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை.என்னை துன்புறுத்த பா.ஜ.க எந்த அதிகாரியையும் நியமிக்கலாம். ஆனால் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நாங்கள் அனைவரும் குற்றவாளிகளாம். மிகவும் கெட்டவர்களாம். ஆனால் சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகியோர் மிகவும் நல்லவர்களாம். அவர்களை ஏன் கைது செய்யவில்லை? என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications