பெட்ரோல் விலை 200 ரூபாய்க்கு போனால் என்ன செய்ய.. பாஜக தலைவருக்கு வந்த குபீர் யோசனை..ஆடிப்போன மக்கள்
கொல்கத்தா: அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200த் தொட்டால், டூவீலரில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும் என்று அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா அதிரி புதிரி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னாள் அமைச்சர் பாபேஷ் கலிடா கடந்த ஜூன் மாதம் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆரம்பமே அசத்தல் என்பதை போல இப்படி ஒரு அரிய கருத்தை அவர் வெளியிட்டு "அசத்திவிட்டார்."
Rain alert: அடுத்த 3 நாட்களுக்கு அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. தமிழகம் & கேரளாவுக்கு எச்சரிக்கை
நிகழ்ச்சியொன்றில் பேசியபோது இவ்வாறு பாபேஷ் கலிடா கூறியுள்ளாராம்.
பாஜக தலைவர் யோசனை
அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200ஐ தொட்டால் இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும். இருந்தாலும் அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும். என்று "இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோரம் யார் சொன்னது.." என்று மக்களே வியந்து கேட்கும் அளவுக்கான ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் பாபேஷ் கலிடா.
மக்களுக்கு அவமானம்
அசாம் மாநில காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பாபீடா சர்மா இதைக் கேட்டு தலைசுற்றிப்போய் நிருபர்களை சந்தித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், பாஜக மாநிலத் தலைவர் எந்தக் காரணத்துக்காக இதை சொன்னாரோ தெரியவில்லை. ஆனால், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் பொது மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களின் தீவிரத்தை உணராமல், அவர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதையே அவரது பேச்சு காட்டுகிறது என்று ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.
200 ரூபாய்
மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டி விட்டது. இப்படியே போனால் 200 ரூபாயை தொட்டு விடும் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் இப்படி ஒரு கருத்தை பாபேஷ் கலிடா உதிர்த்துள்ளார்.
பயங்கர ஐடியா
அசாம் தலைநகர் குவஹாத்தியில், செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.80, டீசல் விலை ரூ. 94.27க்கும் விற்பனையாகிறது. அதற்குள்ளாக இப்படி ஒரு ஐடியா கொடுத்துள்ளார் இவர். ஏற்கனவே 110 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனையாகும் நகரங்களில் இவர் வசித்தால் எந்த மாதிரி ஐடியா கொடுத்து இருப்பாரோ தெரியவில்லை.
குற்றச் செயல்
இருசக்கர வாகனங்கள் இருவருக்கு மட்டும்தான் என்று இந்திய மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது. அதற்கு மேல் பயணம் செய்தால் அது அபராதம் விதிக்கக் கூடிய அளவிற்கு தவறான செயலாகும். மேலும் மூன்று பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒரு இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது அந்த வாகனம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளது. பிற வாகனங்களுக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. உடலுறுப்பு இழப்பு, உயிரிழப்பு வரை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது இது போன்ற பயணங்கள். ஆனால் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் இஷ்டத்திற்கு இது போன்ற கருத்தை கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.