திருப்பதி கோவிலில் இந்த ஆண்டு 2 பிரமோற்சவம்: தரிசன டிக்கெட்டுக்கள் தபால் நிலையங்களில் விற்பனை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுக்கு ஒருமுறை 2 பிரமோற்சவம் வருவது உண்டு. அதன்படி இந்த ஆண்டு 2 பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போது முதலே சிறப்பான ஏற்பாடுகளை செய்ய திருமலை தேவஸ்தானம் தயாராகிவருகிறது.
பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆந்திரா, தெலுங்கானாவில் தபால் நிலையங்களில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. நாடுமுழுவதும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில் 10 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரம்மோற்சவ விழாக்கள்
திருப்பதியில் செப்டம்பர் 14ஆம்தேதி முதல் 24ஆம் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம் நடைபெறுகிறது. இதே போல் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடக்கிறது. 2 பிரமோற்சவங்களையும் சிறப்பாக நடத்த தேவஸ்தானம் இப்போதே திட்டமிட்டு வருகிறது.
இரண்டு வைகுண்ட ஏகாதசி
இதே போல் 2015 ஆம் ஆண்டு இரண்டு வைகுண்ட ஏகாதசி விழா வருகிறது. ஜனவரி 1ஆம் தேதியைப் போல டிசம்பர் 21ஆம் தேதியும் வைகுண்ட ஏகாதசி விழா வருகிறது. மறுநாள் 22ஆம் தேதி துவாதசி விழா நடக்கிறது.
முக்கிய விழாக்கள்
ஏழுமலையானுக்கு இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் நடக்கும் முக்கிய உற்சவங்களின் தேதி விவரங்களை தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
ஜனவரி 16ஆம்தேதி- பார்வேட்டை, ஜனவரி 25ஆம் தேதி-ரதசப்தமி, மார்ச் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தெப்ப உற்சவம், மார்ச் 21ஆம் தேதி-யுகாதி ஆஸ்தானம், 28ஆம் தேதி- ஸ்ரீராம நவமி ஆஸ்தானம், ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை -பத்மாவதி பரியை உற்சவம் நடைபெறுகிறது.
கோகுலாஷ்டமி
ஜூன் 1 மற்றும் 2ஆம் தேதி- ஸ்ரீவாரி சேஷ்ட அபிசேகம், ஜூலை 17ஆம் தேதி- ஆனி வார ஆஸ்தானம், ஆகஸ்டு 24 முதல் 27ஆம் தேதி வரை- பவுந்தர உற்சவம், செப் 6ஆம் தேதி- கோகுலாஷ்டமி, நவம்பர் 18ஆம் தேதி-புஷ்ப யாசம், டிசம்பர் 21ஆம் தேதி- வைகுண்ட ஏகாதசி, 22-ந் தேதி-துவாதசி விழாக்கள் நடைபெறுகின்றன.
ஆன்லைன் தரிசன டிக்கெட்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட் பெறுவதற்காக கூட்ட நெரிசலில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்யும் வசதியை தேவஸ்தானம் அறிமுகம் செய்தது.
தபால் நிலையங்களில் டிக்கெட்
கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் தபால் நிலையங்களில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையை ஆந்திரா, தெலுங்கானாவில் சோதனை அடிப்படையில் தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த திட்டம் 2 மாநிலங்களில் உள்ள 97 தபால் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இங்கு 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்துள்ளார்.
தங்கும் விடுதி
ஆன்லைன் மூலம் 10 ஆயிரம் டிக்கெட்டும், தபால் நிலையங்களில் 5 ஆயிரம் டிக்கெட்டும் விற்பனை செய்ய ஒதுக்கப்பட்டு உள்ளது. 4 வாரத்துக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
நாடுமுழுவதும் விற்பனை
நாடு முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் திருமலையில் பக்தர்கள் தங்கும் விடுதி, திருமண மண்டபம் போன்றவைகளுக்கு முன்பதிவு செய்யும் திட்டமும் பரிசீலிக்கப்படும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.