சின்னத்திற்கு லஞ்சம்.. 9 மணி நேர விசாரணைக்கு பின்பு இன்றும் நேரில் ஆஜராக தினகரனுக்கு உத்தரவு
நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜராகினார். அவரிடம் 9 மணிநேரமாக துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர்.
டெல்லி: அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி போலீசார் முன்னிலையில் 3வது நாளாக நேற்றும் ஆஜராகினார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார் இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்திடமிருந்து தனது அணிக்கு பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் பணம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் தினகரன் ஆஜராகினார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. நேற்று முன்தினம் ஆஜரான அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இருப்பினும் நேற்றும் ஆஜராக போலீசார் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று மாலை 4 மணியளவில் மீண்டும் டிடிவி தினகரன் டெல்லி போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜராகினார். அவரிடம் 9 மணி நேரமாக துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினார். இருப்பினும் அவரது பதில் திருப்தி அளிக்காததால் மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு நேரில் ஆஜராக தினகரனுக்கு டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரையும் இன்று ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்கு பிறகு தினகரன் கைதாவாரா, போலீசார் அவரை விட்டுவிடுவார்களா என்பது தெரியவரும்.