குரல் மாதிரியை பதிவு செய்ய டிடிவி தினகரன் மறுப்பு - சட்டத்தில் இடமில்லை என்கிறார்!
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றத்தில், டி.டி.வி. தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன், தனது குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றத்தில், மறுப்பு தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியைப் பதிவு செய்ய விதிகள் இல்லை என அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகர் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் முன்பணமாக 1.30 கோடி ரூபாய் கொடுத்தார் என்பது டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டாகும்.

திகாரில் தினகரன்
முன்பணம் 1.30 கோடி ரூபாய் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இடைத்தரகர்களையும், ஹவாலா ஏஜெண்ட்டுகளையும் கைது செய்துள்ளனர். டிடிவி தினகரனை கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி கைது செய்த போலீசார் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.

குரல் சோதனை
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பேசிய செல்போன் உரையாடல் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனால் இருவரின் குரலையும் சோதனை செய்ய வேண்டும் என்று டெல்லி போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர்.

நீதிமன்றத்தில் வாதம்
இந்த கோரிக்கை மீதான விசாரணை கடந்த 11ஆம் தேதி நீதிமன்றத்தில் வந்தது. அப்போது தினகரன் மற்றும், சுகேஷ் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த குரல் சோதனைக்கு தினகரன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. முன்கூட்டியே கருத்து கேட்காமல் இந்த குரல் சோதனை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இந்த சோதனைக்கு அனுமதிக்கக்கூடாது என்று டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

குரல் சோதனைக்கு கோர்ட் அனுமதி
இந்நிலையில் இரு தினங்களக்கு முன்பு இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளைச் சோதனை செய்ய காவல்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தினகரன் மறுப்பு
குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றத்தில், டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியைப் பதிவு செய்ய விதிகள் இல்லை என டிடிவி தினகரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து பாயும் வழக்கு
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டுள்ளது. இதனிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகு மறுதேர்தல் குறித்து தினகரனும், சுகேஷ் சந்திரசேகரும் பேசிய ஆடியோ பதிவு தங்களிடம் உள்ளதாக நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது. தனக்கு ராசியான எண் 5 என ஜோதிடர் கூறியுள்ளதாக சுகேஷிடம் தினகரன் தெரிவித்துள்ளார். இந்த தேதியில் தேர்தல் தேதியை குறிக்க டிடிவி தினகரன் லஞ்சம் தர முயன்றதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கும் விஸ்வரூபம் எடுக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications