ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்படவில்லை: சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம்!
டெல்லி: ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார்.
அசிரியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் மீதும் போர் தொடுத்தனர். இந்த போரின் போது ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் நகரத்தில் ஜூன் 10-ந் தேதியன்று 91 வெளிநாட்டவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
இவர்களில் 40 பேர் இந்தியவர்கள். 51 வங்கதேச நாட்டவர். கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரையும் மீட்க பஞ்சாப் முதல்வர் பாதல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்ததுடன் கடத்தப்பட்டோர் குடும்பத்தினருக்கு மாதாந்திர நிதி உதவியையும் அறிவித்திருந்தார்.
இருப்பினும் 40 இந்தியர்களின் நிலை என்ன என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் குர்திஸ்தானின் ஏர்பில் நகரில் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஷபி மற்றும் ஹாசன் ஆகியோர் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளனர்.
அந்தப் பேட்டியில் "கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஹர்மீத் என்பவர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்தார். அவர் எங்களிடம் கடந்த ஜூலை மாதம் 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் படுகொலை செய்ததை தாம் நேரில் பார்த்ததாக ஹர்மீத் தெரிவித்தார்" என்று கூறியுள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த வங்கதேசத்தவரின் இந்தப் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இது குறித்து ராஜ்யசபாவில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சுஷ்மா ஸ்வ்ராஜ், ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் இந்தியர்கள் கடத்தப்பட்டது குறித்து பல நாடுகள், அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு விசாரித்தது. இதில் 39 இந்தியர்கள் கொல்லப்படவில்லை என்று 6 தகவல்கள் எழுத்துப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவித்திருக்கின்றன.
இதை அமைச்சர்கள் அருண் ஜேட்லி மற்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோரிடம் தெளிவுபடுத்தியிருக்கிறேன். கடத்தப்பட்டோர் உயிருடன் இருக்கிறார்கள் என்று 1% தகவல் கிடைத்தாலும் கூட மத்திய அரசின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். கடத்தப்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கான எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லை. தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த ஹர்மீத் பாதுகாப்பாக இருக்கிறார் என்றார்.
சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்துள்ள போதிலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.