ஆம் ஆத்மி எம்.பிகளுக்கு நக்சலைட்டுகள் தொடர்பு: பஞ்சாப் முன்னாள் முதல்வர் கருத்தால் சர்ச்சை
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்களில் இருவருக்கு நக்சலைட்டுகள் தொடர்பிருப்பதாக அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இக்குற்றச்சாட்டை ஆம் ஆத்மி கட்சி நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமரீந்தர்சிங், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 எம்.பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் பாட்டியாலா எம்.பி. தரம்வீர் காந்தி, பரிதாகோட் எம்.பி, சாது சிங் ஆகியோர் நக்சலைட் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள்.

இவர்கள் அனைவரும் படித்து வேலையில்லாத இளைஞர்களை ஆபத்தான பாதைக்கு திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியிருந்தார். அமரீந்தர்சிங்கின் குற்றச்சாட்டு பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் அமரீந்தரின் இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி எம்.பி.க்கள் மறுத்துள்ளனர். அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளனர். இதை தாம் எதிர்கொள்ள தயார் என்று அமரீந்தர்சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications