போலீஸ் வாகனத்தை எரிக்க முயன்ற கலகக்காரர்கள்.. பெங்களூர் போலீஸ் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி
பெங்களூரு: பெங்களூருவில் வன்முறையை ஒடுக்க இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காத போலீஸார், இன்று போராட்டக்காரர்கள் புோலீஸ் வாகனத்தை எரிக்க முயன்றபோது தங்களைத் தற்காத்துக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
பெங்களூருவில் ஹெக்கனஹள்ளி, ராஜகோபாலநகர் ஆகிய இடங்களில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படாதால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டம் தலை தூக்கியது. தமிழர்கள் கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தீ வைத்து கொளுத்தப்பட்டன.
கர்நாடகாவில், காவிரி நீர் விவகாரம் தொடர்பான வன்முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல இடங்களில், தமிழகப் பதிவெண் கொண்ட பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டும், தீ வைத்து எரிக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.
பெங்களூரில் வெடித்துள்ள கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர இவை போதாது என்பதால் கூடுதலாக, சிஆர்பிஎப், ஆர்பிஎப், மத்திய தொழிலக படை ஆகியவை பெங்களூருவில் நடக்கும் கலவரத்தைக் கட்டுப்படுத்த களம் இறக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூர் - மைசூர் நைஸ் சாலையில் டிசோசா லேஅவுட் பகுதியில் பிஎஸ்ஐடி கல்லூரி அருகே லாரி நிறுத்தமிடத்தில் 27 லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 27 லாரிகளும் சரக்குகளுடன் எரிந்து நாசமாகின. லாரிகள் அருகருகே நிறுத்தப்பட்டிருந்ததால் ஒன்றுக்கு வைக்கப்பட்ட தீ அனைத்து லாரிகளும் பரவியது. அதேபோல அந்த இடத்தில் உள்ள கொடவுனில் நிறுத்தப்பட்டிருந்த கே.பி.என் மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான சொந்தமான 52 சொகுசு பேருந்துக்கள் பேருந்துகள் எரிக்கப்பட்டன.
இன்று போராட்டம் நடைபெற்றதால் பேருந்துகள் அனைத்தும் பத்திரமாக கேபிஎன் பணிமனைக்குள் நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் அங்கு புகுந்த போராட்டக்காரர்கள் 2 பேருந்துகளுக்குத் தீவைத்துள்ளனர். ஆனால் அது அப்படியே மளமளவென மற்ற பேருந்துகளுக்கும் பரவி அந்த இடமே நெருப்புக் காடாக மாறியது. பேருந்துகள் ஒன்றுக்கொன்று அருகருகே நிறுத்தப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவியது.
பெங்களூரு நகர சட்டம்-ஒழுங்கு போலீசின் கட்டுப்பாட்டில் இல்லாததால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு காப்பதே மாநில அரசின் கடமை என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியிருந்தது. உச்சநீதிமன்றம் எச்சரிக்கையையும் மீறி சட்டம்-ஒழுங்கை காக்க கர்நாடக அரசு தவறி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனிடையே பெங்களூருவில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார். பெங்களூருவில் ஹெக்கனஹள்ளி, ராஜகோபாலநகர் ஆகிய இடங்களில் போலீசார் வாகனத்தை எரிக்க வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.