'பைக் டாக்ஸி'.. நாட்டில் முதல்முறையாக பெங்களூரில் அறிமுகம்! கி.மீக்கு ரூ.2 கட்டணம்
பெங்களூர்: நாட்டிலேயே முதல்முறையாக, கால் டாக்சி பாணியில், வாடகை பைக் சேவையை, பெங்களூரில், உபேர் மற்றும் ஓலா நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன.
போக்குவரத்து நெருக்கடிக்கு பெயர் பெற்றது பெங்களூர் மாநகரம். கடந்த வரும், மார்ச் மாத கணக்கெடுப்புபடி, பெங்களூரில் 38 லட்சம் டூவீலர்களும், 10 லட்சம் கார்களும் இயங்குகின்றன.
போக்குவரத்து நெரிசலில் இந்தியாவிலேயே 2வது மோசமான நகரம் பெங்களூர். இங்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு வாகனம் சராசரியாக 9.5 கி.மீ தூரத்தை மட்டுமே கடக்க முடியும்.
பைக்குகள் வசதி
டிராபிக் ஜாம் காரணமாக, பஸ், கார்களில் பயணிப்போரைவிட, பைக்கில் செல்வோருக்கு பாதிப்பு குறைவுதான். சந்து, பொந்துகளில் புகுந்து செல்ல பைக்குகளால் முடியும். எனவே பைக்குகள் நகர்ந்தபடியே இருக்கும்.
ஓலா, உபேர்
இதை கருத்தில் கொண்டு, ஓலா மற்றும் உபேர் ஆகிய கால் டாக்சி நிறுவனங்கள் பைக் வாடகை சேவையை அறிமுகம் செய்துள்ளன. நேற்று இரவு முதல் ஓலாவும், இன்று முதல் உபேரும் பெங்களூரில் இதுபோன்ற புதுவகை வர்த்தகத்தில் குதித்துள்ளனர்.
5 நிமிடத்தில் பிக்-அப்
ஓலா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குநர் ஆனந்த் சுப்பிரமணியன் கூறுகையில், டிராபிக் நெருக்கடிதான், பைக் சேவை திட்டத்திற்கு உந்து சக்தியாக இருந்தது. அழைப்பு வந்த 5 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களை பிக்-அப் செய்யும் வகையில் வசதி செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.
அனைவருக்கும் வேலை
முதல்கட்டமாக பயிற்சி பெற்ற டிரைவர்களை கொண்டு பைக்கை இயக்க வைக்க போகும் ஓலா, பின்னர், லைசென்ஸ் மற்றும் பைக் வைத்திருக்கும், நகரவாசிகள் அனைவரிடமும் தங்களின் டிரைவர்களாக சேர அழைப்புவிடுக்க போகிறதாம்.
ரூ.3 கட்டணம்
உபேர் ஒரு கி.மீ தூரத்திற்கு ரூ.3 முதல் ரூ.5 வரை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் பைக் உரிமையாளர்களுக்கு 80 சதவீத தொகையும், 20 சதவீத தொகை நிறுவனத்திற்கும் வருமாறு பார்த்துக்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிவிப்பு விரைவில்
கட்டணம், அழைப்பு எண் உள்ளிட்ட தகவல்களை பிரஸ் மீட் வைத்து இரு நிறுவனங்களும் விரைவில் வெளியிட உள்ளதாக தெரிகிறது. அதுவரை சோதனை அடிப்படையில் இந்த சேவை செயல்படும். இதனிடையே ஓலா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓலா ஆப் மூலமாக பைக்குகளை புக் செய்யலாம் எனவும், கி.மீக்கு ரூ.2 கட்டணம் எனவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 எனவும் தெரிவித்துள்ளது.
உலகில் 2வதாக
பின்புறம் அமர்வோருக்கு தாங்களே ஹெல்மெட் தருவதாகவும் ஓலோ அறிவித்துள்ளது. கடந்த வாரம் பாங்காங்கில் உலகில் முதல் பைக் வாடகை சேவையை உபேர் தொடங்கியது. இதன்பிறகு இதுபோன்ற சேவையை பெறும் 2வது நகரம் பெங்களூர். இந்தியாவில், சிறு நிறுவனங்கள் சில நகரங்களில் பைக்-டாக்சி சேவையை அறிமுகம் செய்திருந்தாலும் கூட தொழில்முறையாக, இதுபோன்ற சேவை அறிமுகமாவது முதல் முறையாகும்.