கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி கார் மீது செருப்பு வீச்சு... திறப்பு விழாவில் பரபரப்பு
திருவனந்தபுரம் : பாலராமபுரத்தில் கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் அருகே பாலராமபுரத்தில் நீச்சல்குளம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி மற்றும் அமைச்சர்கள் மாணி, முனீர் உட்பட பலர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதை ஒட்டி அங்கு ஏராளமானோர் குவிந்திருந்தனர். கேரளாவில் நிதி அமைச்சர் மாணிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் துணை அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாணி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தீர்மானித்திருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற இடம் அருகே ஏராளமானோர் குவிந்தனர்.
அப்போது உம்மன்சாண்டி காரில் வந்தார். அமைச்சர் மாணி தான் வருவதாக கருதிய போராட்டக்காரர்கள், உம்மன்சாண்டியின் கார் மீது கருப்பு கொடியையும் செருப்புகளையும் வீசினர்.
இவை உம்மன்சாண்டி கார் மீது விழுந்தது. சில செருப்புகள் பாதுகாப்பு அதிகாரிகளை பதம் பார்த்தது. இதையடுத்து போலீசார் தொண்டர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் உம்மன்சாண்டி கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.