பட்ஜெட் 2015: தமிழகத்தில் “எய்ம்ஸ்” மருத்துவமனை!
டெல்லி: இந்தியாவிற்கான மத்திய பட்ஜெட் 2015-16 நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கல்வி நிறுவனங்களை அதிக அளவில் அதிகரித்துள்ளது மத்திய அரசு.
மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான அறிவிப்புகள்:
கல்வி மேம்பாட்டிற்கான முதல் அறிவிப்பாக தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஆந்திராவில் எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய அளவிலான மருத்துவக் கல்லூரிகள்- மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் கல்வி நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தோட்டக்கலை மீதான மாணவர்களின் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்படும்.
கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கான பயிற்சிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களும் பயன்பெறும் வகையில், "டிஜிட்டல் இந்தியா" திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் கிராமங்களுக்கு இணையதள இணைப்பு அளிக்கப்படும்.
கர்நாடக மாநிலத்தில் தலைசிறந்த பொறியியல் கல்விக்கான இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி எனப்படும் ஐஐடி கல்வி நிறுவனம் ஆரம்பிக்கப்படும்.
மேலாண்மை துறை கல்விக்கான ஐ.ஐ.எம் கல்வி நிறுவனங்கள் காஷ்மீர் மற்றும் ஆந்திராவில் கட்டமைக்கப்படும்.
கல்வி மற்றும் மதிய உணவு திட்டத்திற்காக ரூபாய் 68,968 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கான நிதி என்று ஒரு பெரும் தொகை ஒதுக்கப்பட்டிருக்கும் போதும், கல்விக்கடன், உயர்கல்வி குறித்தான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.