10 மாவட்டங்களுடன் தெலுங்கானாவுக்கு ஒப்புதல் அளித்தது கேபினட்!
டெல்லி: ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா புதிய மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அத்துடன் தெலுங்கானாவில், ராயலசீமா பகுதியின் 2 மாவட்டங்களை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டது.
டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும், தெலுங்கானா மத்திய அமைச்சர்கள் குழுவின் தலைவருமான சுஷில் குமார் ஷிண்டே, இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அவர் இந்த மசோதாவை ஆந்திரப் பிரதேச சட்டசபையின் பார்வைக்கு அனுப்பி வைப்பார்.

இம் மசோதாவுக்கு ஜனாதிபதிக்கு ஒப்புதல் அளித்த பின்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நடப்பு குளிர் காலக் கூட்டத் தொடரில் தெலுங்கானா மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.
முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் பங்கேற்றனர்.
அக் கூட்டத்தில் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த அனந்தபூர் மற்றும் கர்னூல் மாவட்டங்களை தெலுங்கானாவில் இணைத்து ராயல தெலுங்கானா என அமைக்கலாம் என்ற மத்திய அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு புதிய மாவட்டங்களை இணைக்கும் முடிவை கைவிட்டு, 10 மாவட்டங்களுடன் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்கெனவே எடுத்த முடிவே இறுதி செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications