எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜகவுக்கு பெரும் தோல்வி நிச்சயம்.. உ.பி. இடைத் தேர்தல் சொல்லும் பாடம்
லக்னோ: எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்பது உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ததால், காலியான, கோரக்பூர் லோக்சபாப தொகுதி மற்றும் புல்புர் ஆகிய தொகுதிகளில் கூட பாஜக வெல்ல முடியாத நிலையில், இன்று கைரானா லோக்சபா இடைத் தேர்தலும் அக்கட்சிக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.
கைரானா தொகுதியில் ராஷ்டிரிய லோக்தளம் சார்பில் போட்டியிட்ட தபசும் ஹசன், 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.
ஒரே அணி
இந்த வெற்றிக்கு முக்கிய காரணம், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய மூன்று முக்கிய எதிர்க்கட்சிகளுமே ஈகோவை மறந்து இணைந்து தபசும் ஹசனுக்கு ஆதரவு அளித்ததுதான். எதிர்க்கட்சிகளால் வாக்குகள் சிதறி அது பாஜகவுக்கு ஆதாயமாக முடிவதை உணர்ந்தே இப்படி இணைந்து பாஜகவை எதிர்த்தன எதிர்க்கட்சிகள். கைமேல் பலன் கிடைத்துள்ளது.
வெற்றியை இழந்த பாஜக
கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி உ.பி.யின் கோராக்பூர், புல்பூர் இரு லோக்சபா தொகுதிகளுக்கும், பீகாரில் அரேரியா லோக்சபா தொகுதிக்கும் பீகாரில் ஜகனாபாத், பஹாபூவா என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளாக எலியும் பூனையுமாக இருந்த சமாஜ்வாதியும் , பகுஜன் சமாஜ் கட்சியும் மறைமுக கூட்டணி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால்தான் கோரக்பூர், புல்பூரில் வெற்றியை இழந்தது பாஜக.
வலிமையான எதிர்க்கட்சி
இப்போது மீண்டும் எதிக்கட்சி கூட்டணி பாஜகவை மிரட்டுகிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டியதன் அவசியத்தை நாட்டுக்கு இது உணர்த்தியுள்ளது. எதிர்க்கட்சி என்பது ஒரு வண்டியின் அச்சாணி போன்றது. எதிர்க்கட்சி வலிமையாக இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது. எனவே ஜனநாயகத்திற்காக ஈகோவை மறந்து எதிர்க்கட்சிகள் இணைந்து நிற்க வேண்டியது அவசியமாகிறது.
வலுவான கூட்டணி
மூன்றாவது அணி அமைக்கலாம் என மமதா பானர்ஜி முயற்சிகளை முன்னெடுத்து வருவது, வாக்குகளை சிதற வைத்து பாஜகவுக்கே பழையபடியும் பலத்தை அளித்துவிடும் என்பதை உ.பி. இடைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. இதனால் காங்கிரஸ் இனி விழித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மமதாவையும் உள்ளடக்கிய வலுவான எதிரணியை உருவாக்கி லோக்சபா தேர்தலில் பாஜகவை எதிர்த்து, அக்கட்சிக்கு உண்மையாக மக்களிடம் பலம் உள்ளதா அல்லது எதிர்க்கட்சிகளின் வாக்கு சிதறலால் வென்று வந்ததா என்பதை சோதித்து பார்க்கும் சோதனை களமாக பயன்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.