உ.பியில் நிருபரின் தாயார் எரித்துக்கொலை... சி.பி.ஐ. விசாரணை கோரும் மகன்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் காவல் நிலையத்தில் 2 காவலர்களால் ஒரு பெண் எரித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அவரது மகனும் பத்திரிகையாளருமான சந்தோஷ் வலியுறுத்தி உள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் பெயர் நிது திவேதி என்பதாகும். இவரது மகன் பாரபங்கியிலுள்ள இந்தி நாளிதழில் ரிப்போர்ட்டராக பணிபுரிகிறார் அவரது பெயர் சந்தோஷ் என்பதாகும். கிராமம் ஒன்றில் இரு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது தொடர்பாக நிருபரின் தந்தை ராம் நரேனை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் வீடு திரும்பாததால் அவரது மனைவி அவரை தேடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
ரூ.1 லட்சம் லஞ்சம்
அப்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த ராம் சாகேப் சிங் யாதவ், சப் இன்ஸ்பெக்டர் அகிலேஷ ராய், ஆகியோர் அந்த பெண்ணிடம், கணவரை விடுவிக்க 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். மேலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காவலர்கள் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர்.
மரண வாக்குமூலம்
இதில் பலத்த தீக்காயம் அடைந்த அப்பெண் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் பாராபங்கி மாவட்ட நீதிபதி யோகேஸ்வர் ராம் மிஸ்ராவிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் இந்த தகவல்களை தெரிவித்தார். பின்னர் இன்று காலை அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அகிலேஷ் யாதவ் உத்தரவு
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இரண்டு போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அந்த காவலர்களை விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
சி.பி.ஐ விசாரணை தேவை
இதையடுத்து இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அவரது மகனும் பத்திரிகையாளருமான சந்தோஷ் வலியுறுத்தி உள்ளார். தன் தாயாரின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொலை வழக்காக பதிவு செய்க
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை என்றும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதல்வரை விரைவில் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.