உச்ச நீதிமன்றம் கூறினால் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவோம்: கர்நாடக அமைச்சர்
தும்கூர் (கர்நாடகா): தமிழக அரசின் சிறைத்துறை கேட்டுக்கொண்டால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெங்களூர் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து கர்நாடக அரசு பரிசீலிக்க தயாராக உள்ளது என்று கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்தார்.
கர்நாடகாவுக்கு அதிகாரம் இல்லை
கர்நாடக மாநிலம் தும்கூரில் செய்தியாளர்களின் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறுகையில், "ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்பேரிலேயே வழக்கு நடைபெற்றுவருகிறது. எனவே இதில் மேற்கொண்டு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமானாலும் அதற்கு உச்ச நீதிமன்ற அனுமதி தேவை.
தமிழகம் கேட்க வேண்டும்
தமிழக சிறைத்துறை ஐஜி மற்றும் அம்மாநில தலைமைச் செயலாளர் ஆகியோர் கர்நாடகாவிடம் கோரிக்கைவிடுத்தால், ஜெயலலிதாவை அந்த மாநில சிறைக்கு மாற்றம் செய்வது குறித்து கர்நாடக அரசு பரிசீலிக்கும். தமிழகம் கோரிக்கை விடுத்தால்தான், உச்சநீதிமன்றத்திடம் கர்நாடகா இதுகுறித்து அனுமதி கேட்க முடியும்.
கன்னடர்களை பாதுகாக்க வேண்டும்
vமேலும், ஜெயலலிதா பிரச்சினைக்காக தமிழகத்திலுள்ள கன்னடர்கள் மீது யாரும் தாக்குதல் நடத்திவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அந்த மாநில அரசின் பொறுப்பாகும். ஏனெனில் இந்த வழக்கில் கர்நாடகாவிற்கு எந்த பாத்திரமும் கிடையாது. அரசு வக்கீல் கூட கர்நாடக அரசின் கருத்தை கேட்டு வாதிடும் நிலையில் இல்லை. இவ்வாறு ஜெயச்சந்திரா கூறினார்.
மூத்த தலைவர்கள் முணுமுணுப்பு
கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு கெடுவதற்கு ஜெயலலிதா வழக்கு ஒரு காரணமாக இருப்பதாக தேவகவுடா உள்ளிட்ட இம்மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்கள் முணுமுணுத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.