"உங்க அக்கா, தங்கச்சிங்களை அறிமுகம் இல்லாதவங்களோட செல்பி எடுக்க அனுமதிப்பீங்களா?"
புலந்த்சாகர், உ.பி: உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் ஒரு வாலிபர் மாவட்ட கலெக்டருடன் செல்பி எடுக்க முயற்சித்து கைதான விவகாரம் தொடர்பாக அந்த பெண் கலெக்டரிடம் பேட்டி எடுத்த செய்தியாளரிடம், உங்களுடைய மனைவி, சகோதரிகளை, அறிமுகம் இல்லாதவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா என்று கேட்டுள்ளார் கலெக்டர் சந்திரகலா.
புலந்த்சாகர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருப்பவர் சந்திரகலா. சமீபத்தில் இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது 18 வயதான பராஸ் அகமது என்ற வாலிபர் இவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முயன்றார். அதை சந்திரகலா ஆட்சேபித்தார். அனுமதியில்லாமல் இப்படியெல்லாம் போட்டோ எடுக்கக் கூடாது என்று அவர் கண்டித்தார்.
ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து செல்பி எடுக்க முயன்றதால் அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக ஒரு செய்தியாளர் (பெயர் சுமன்), கலெக்டர் சந்திரகலாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு கலெக்டர் சந்திரகலா அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்டு அந்த செய்தியாளரை நிலைகுலைய வைத்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் அந்த செய்தியாளர்களிடம் கேட்கையில், உங்களது மனைவி, சகோதரிகளை அறிமுகம் இல்லாத வேறு ஆண்களுடன் செல்பி எடுத்துக் கொள்ள அனுமதிப்பர்களா?
உங்க வீட்டுக்கு நான் சில ஆண்களை அனுப்புகிறேன். உங்களது மனைவி, சகோதரிகளுடன் செல்பி எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறீர்களா?. அப்படி செய்ய உங்களுக்குச் சம்மதமா?. பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?"
ஒரு உண்மையான பத்திரிகையாளராக செயல்படுங்கள். ஒரு ஜென்டில்மேனாக செயல்படுகள். நான் சாலையில் போகும் ஏதோ ஒரு பெண் இல்லை. பொறுப்பான பதவியில் உள்ள பெண். யார் வேண்டுமானாலும் என்னுடன் செல்பி எடுக்க என்னால் எப்படி அனுமதிக்க முடியும்.
யாருடைய சுதந்திரத்திலும் யாரும் தலையிட அனுமதியில்லை. இக்காலத்து இளைஞர்கள் பொறுப்பில்லாமல் இதுபோல நடப்பது எனக்கு வேதனை தருகிறது. எரிச்சல் வருகிறது. அவர்களது தலையில் மாபெரும் பொறுப்புகள் உள்ளன. இந்த தேசம் அவர்களை நம்பியுள்ளது. ஆனால் அவர்கள் அதை உணராமல் இப்படி விளையாட்டுத்தனமாக இருப்பது வருத்தப்பட வைக்கிறது.
உண்மையில், அந்த இளைஞர், செல்பி எடுக்க முயற்சித்ததற்காக கைது செய்யப்படவில்லை. எடுத்த படங்களை அழிக்குமாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை செய்ததற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறியுள்ளார் கலெக்டர் சந்திரகலா.