கேரளா, கோவா ஆளுநர்கள் டிஸ்மிஸ்?
டெல்லி: மத்திய அரசு கேட்டுக் கொண்ட பின்னரும் பதவி விலக மறுத்து வரும் கேரளா ஆளுநர் ஷீலா தீட்சித், கோவா மாநில ஆளுநர் வன்சூ ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து மாநில ஆளுநர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் ஜோஷி, சத்தீஸ்கரின் சேகர்தத், நாகாலாந்தின் அஸ்வனிகுமார், மேற்கு வங்கத்தின் எம்.கே. நாராயணன் ஆகிய ஆளுநர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
ஷீலா, வன்சூ மறுப்பு
ஆனால் கேரளாவின் ஷீலா தீட்சித், கோவாவின் வன்சூ ஆகியோர் ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர். இதனால் இவர்கள் இருவரையும் வேறு சிறிய மாநிலங்களுக்கு மாற்ற முன்பு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
6 மாநிலங்களில் காலி
இந்த நிலையில் குஜராத் ஆளுநர் கமலா, கர்நாடகா ஆளுநர் பரத்வாஜ் ஆகியோரின் பதவிக் காலமும் முடிந்துவிட்டது. மொத்தம் தற்போதைய நிலையில் 6 மாநில ஆளுநர்கள் பதவி காலியாக இருக்கிறது.
வன்சூ, ஷீலா டிஸ்மிஸ்?
இந்த மாநிலங்களுக்கான ஆளுநர்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர். இதனிடையே பதவி விலக மறுத்த ஷீலா தீட்சித் மற்றும் வன்சூ ஆகியோரை டிஸ்மிஸ் செய்து அங்கும் புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹெலிகாப்டர் ஊழலில் வன்சூ
இதில் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே. நாராயணைப் போல சிக்கியிருப்பவர் கோவா ஆளுநர் வன்சூ என்பதும் குறிப்பிடத்தக்கது.