சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தில் 600 பேர் தேர்ச்சி
டெல்லி: மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில், 600க்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெற்றனர்.
இந்திய அரசு நிர்வாகத்தில் மதிப்பு மிக்க பணிகளாகக் கருதப்படும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கு குடிமைப் பணித் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, பிரதான எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடைபெற்ற குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 602 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
தமிழக அரசு நடத்தும், அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், 225 பேர் எழுதியதில், 60க்கும் மேற்பட்டோர், முதன்மை தேர்வுக்கு தேர்ச்சி பெற்றிருப்பதாக, மைய வட்டாரம் நேற்று தெரிவித்தது. தமிழகத்தில், 600க்கும் மேற்பட்டோர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதியவர்கள் தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் மதிப்பெண் விவரத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டாம் என தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2014-ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு, மதிப்பெண்கள், கட்-ஆப் மதிப்பெண்கள், விடைக் குறிப்புகள் ஆகியவை தேர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக முடிவடைந்த பிறகே அதாவது தேர்வின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியிடப்படும்.
எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டம் உட்பட எவ்வகையிலும் தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் விவரத்தைக் கோர வேண்டாம். அத்தகைய விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள பிரதான எழுத்துத் தேர்வுக்கு விரிவான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.