யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத பார்வையற்ற மாணவர்களுக்கு கூடுதல் நேரம்
டெல்லி: மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) முதன்மைத் தேர்வை எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்கிற யு.பி.எஸ்.சி மத்திய அரசு பணிக்கான காலி இடங்களிலை நிரப்புவதற்கான முதல் நிலைத் தேர்வு வரும் 24-ஆம் தேதி ஞாயிறன்று நடைபெற உள்ளது.
அப்போது தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகியவற்றில் தனித்தனியே கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்படும்.
இதன் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 40 நிமிடங்கள் தேர்வு எழுத கிடைக்கும் என்றும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடையளிக்க வேண்டாம்
யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் ஆங்கிலத் திறனறிதல் தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்க வேண்டாம் என மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நிலைத் தேர்வின் முதல் மற்றும் இரண்டாம் தாள்கள் தலா இரண்டு மணி நேர கால அவகாசத்துடன் நடத்தப்பட உள்ளது.
மதிப்பிட மாட்டாது
இதில் இரண்டாம் தாளில் ஆங்கில திறனறிதல் தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்க வேண்டியதில்லை என்றும், அது மதிப்பிடப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மதிப்பெண்கள்
தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்படும் போது, முதல் தாளில் 200 மதிப்பெண்களும், இரண்டாம் தாளில் ஆங்கில திறனறிதல் தொடர்பான பகுதிக்கான மதிப்பெண்களை கழித்த பின் மீதமுள்ள மதிப்பெண்களும் பரிசீலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.