காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது.. ஏப்.12ல் கர்நாடகா பந்த்.. கன்னட அமைப்புகள் அறிவிப்பு
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என வலியுறுத்தி வரும் 12ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஏற்கனவே தர்ணா செய்து கவனம் ஈர்த்தனர்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் கன்னட அமைப்புகள் கடும் கோபத்தில் உள்ளன. தமிழகத்தில் முழு கடையடைப்பு நடத்தினால் தமிழக எல்லையை முற்றுகையிடுவோம் என வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பந்த் நடத்தின. இதற்கு பதிலடியாக வரும் 12ம் தேதி கர்நாடகாவில் பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பின் கூட்டமைப்பு இந்த பந்த்துக்கு அழைப்புவிடுத்துள்ளது. தமிழகத்தின் அழுத்தங்களுக்கு பணிந்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட கூடாது என்பதற்காக கன்னட அமைப்பினர் இதுபோன்ற, நெருக்கடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.