தமிழக அமைச்சர்களை தவிக்கவிட்ட கர்நாடக போலீஸ்… பெண் எம்.எல்.ஏவை ஓட ஓட விரட்டினர்!!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கின் கிளைமாக்ஸ் நாளான 27ஆம் தேதியன்று கர்நாடக தலைநகரமான ஜில் சிட்டி பெங்களூர் ஹாட் சிட்டியானது. காரணம் அதற்கு முந்தைய தினமே குவிந்த ஆயிரக்கணக்கான அதிமுகவினரால்தான்.
தமிழகத்தில் அமைச்சர்கள் அரைகிலோமீட்டருக்கு முன்பு வரும்போதே போலீசார் சல்யூட் அடிப்பார்கள். ஆனால், கர்நாடகத்தில் தமிழக அமைச்சர்கள் யாரையும் அங்குள்ள போலீசாருக்கு அறிமுகம் கிடையாது என்பதால் அலைக்கழிப்புக்கு ஆளாகினர்.
நம்மூர் அமைச்சர்கள் சிலர் போலீசின் அடிதடிக்கும் ஆளாக நேரிட்டது. பரபரப்பான தீர்ப்பு அறிவிப்புக்கு முன்னும் பின்னும் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் நடைபெற்ற காட்சிகள் தீர்ப்பை விட சூடாக இருந்தது.
144 தடை உத்தரவு
தீர்ப்பு தினமான 27-ஆம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறைவளாகத்தை நோக்கி அதிமுகவினர் அனைவரும் படையெடுத்தனர். சிறைவாசலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் பாஸ் இல்லாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். காரணம் 144 தடை உத்தரவுதான்.
அனைவருக்கும் சோதனை
பாஸ் இருந்த அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரின் வாகனங்களும் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர் அதேசமயம் அவர்களின் உதவியாளர்களை அனுமதிக்கவில்லை.
செய்தியாளர்களுக்கு தனி இடம்
நீதிமன்றத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அங்கு அமைக்கப்பட்ட மேடையில் அமர்த்தப்பட்டனர்.
கர்நாடக போலீஸ்
தமிழக எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், மேயர்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவரும் அனுமதி பாஸ் காண்பித்தே உள்ளே போக முடிந்தது.
ஸ்டாப்… டோன்ட் கோ
ஓ.பன்னீர்செல்வத்திடம் அங்கிருந்த கர்நாடக போலீஸார் நீங்கள் யார்... நீங்கள் யாராக இருந்தாலும் உள்ளே போகக்கூடாது என்று சொல்லி தடுத்து நிறுத்தினர்.
நான்தான் பன்னீர் செல்வம்…
''என் பேரு பன்னீர்செல்வம். நான் தமிழ்நாடு அமைச்சர்'' என்று சொன்னார். அதன் பிறகே அவர் அனுமதிக்கப்பட்டார்.
அம்மாவுக்காக நடைபயணம்
அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஐந்து கிலோ மீட்டர் நடந்தே நீதிமன்ற வளாகத்துக்கு வந்து சேர்ந்தனர்.
நான் யார் தெரியுமா?
மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜலட்சுமியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 'நான் யாரு தெரியுமா...' என்று ஆரம்பித்தார். ஆனால் போலீஸ் அனுமதிக்க மறுக்கவே, அப்போது திடீரென்று நீதிமன்றத்தை நோக்கி ஓட்டம் எடுத்தார்.
ஓட ஓட விரட்டி
ராஜலட்சுமி. லேடி கான்ஸ்டபிள் ஒருவர் அவரை துரத்திக்கொண்டு ஓட... ஆனாலும் ராஜலட்சுமியைப் பிடிக்கவே முடியவில்லையாம்.
குவிந்த தொண்டர்கள்
பரப்பன அக்ரஹாரா ஜங்ஷனில் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆயிரக்கணக்கில் கூடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் காலை 11.20-க்கு லத்தி சார்ஜ் செய்து கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார்கள்.
அமைச்சர்களுக்கு விழுந்த அடி
இதில் நத்தம் விஸ்வநாதன் உட்பட பல அமைச்சர்களுக்கும் தடியடி விழுந்தது. இதேபோல் மாலை 4.30 மணிக்கும் லத்தி சார்ஜ் செய்து கும்பலைக் கலைக்க வேண்டியிருந்தாம்.
தகித்த பெங்களூர்
தீர்ப்பு வெளியான பின்னர் அதிமுகவினர் வெளிப்படுத்திய ஆக்ரோச கொதிப்பு கூல் சிட்டியான பெங்களூரினை ஹாட் சிட்டியாக்கிவிட்டது என்பதே உண்மை.