நைட்டி அணிந்து "அண்ணாச்சி" கடைக்கு வந்தால் ரூ. 500 அபராதம்... மகாராஷ்டிராவில் அதிரடி!
மும்பை: நைட்டி போட்டுக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும் பெண்கள் ரூ.500 அபராதம் தர வேண்டும் என்று மகாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் உத்தரவு போடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பை அருகேயுள்ளது கோதிவளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் செயல்படும் 'இந்திரயானி மகிளா மண்டல்' என்ற பெண்கள் அமைப்பு தனது ஆபீசுக்கு வெளியே உள்ள அறிவிப்பு பலகையில் வெளியிட்ட அறிவிப்பு கிராமத்திலுள்ள பெண்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது இதுதான்: கோதிவளி கிராமத்தை சேர்ந்த எந்த பெண்களாவது தங்களது வீட்டுக்கு வெளியேயோ அல்லது ரோட்டிலோ நைட்டி அணிந்தபடி தென்பட்டால் அவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெண்கள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர் லட்சுமி பாட்டீல் நிருபர்களிடம் கூறுகையில் "பெண்களுக்கு எதிராக ஆண்களின் பாலியல் உணர்வு தூண்டப்பட ஆடைகள் முக்கிய காரணம். முன்பெல்லாம் எங்கள் கிராமத்தில் உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் சேலை அணிவார்கள். இப்போது நைட்டி கலாச்சாரம் காட்டு தீ போல பரவி, பெண்கள் அனைவரும் நைட்டியோடு கடைகளுக்கு சாமான்கள் வாங்க வருகிறார்கள். எனவேதான் பெண்களின் மாண்பை காப்பாற்ற இதுபோன்ற அபராத முடிவுக்கு வந்துள்ளோம்" என்றார்.
ஆனால் இந்த அபராத விதிப்புக்கு பெண்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் நிலையம் சென்றனர். போலீசார் தலையிட்டு பெண்கள் அமைப்புடன் பேசி, அறிவிப்பு பலகையை அகற்றியுள்ளனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.கோஜ்ரே நிருபர்களிடம் கூறுகையில், ஆடை விஷயத்தில் அபராதம் விதிக்க கிராம பஞ்சாயத்து, பெண்கள் அமைப்புகளுக்கு உரிமை கிடையாது" என்றார்.