மாத்திரை, விஷத்தால் சுனந்தா மரணமடையவில்லை... உள்ளுறுப்பு சோதனையால் தொடரும் மர்மம்
கடந்த ஜனவரி மாதம் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர், தனது கணவருக்கும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்குமிடையே தகாத உறவு இருப்பதாக சமூக வலைதளத்தில் பரபரப்புக் குற்றச்சாட்டுத் தெரிவித்தார். ஆனால், அதற்கடுத்த சில தினங்களிலேயே டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப் பட்டார் சுனந்தா.
அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய சுனந்தாவின் மரணம் கொலையா, தற்கொலையா என்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிகளவிலான மனத்தளர்ச்சி மாத்திரைகள் சாப்பிட்டதே மரணத்திற்குக் காரணம் என அவரது பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில் சுனந்தாவின் மரணம் தொடர்பாக டெல்லிப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உள்ளுறுப்புகள் சோதனைக்காக அனுப்பப் பட்டன. அந்த பரிசோதனையின் முடிவாக சுனந்தா விஷம் அருந்தியதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்றும், சுனந்தா இறந்த போது அவரது உடலில் மனத்தளர்ச்சி நிவாரண மாத்திரைகள் இருந்ததற்கான அறிகுறியும் இல்லை எனத் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சுனந்தாவின் உடல் கிடந்த அதிகாரிகள் கைப்பற்றிய ஆல்ப்ராக்ஸ் காலி மாத்திரை அட்டைகள் புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. விசாரணையை திசைதிருப்ப காலி மாத்திரை அட்டைகள் அங்கு திட்டமிட்டு வைக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.