பீகாரில் அமைதியாக நடந்து முடிந்த 4வது கட்ட வாக்குப்பதிவு- 58% வாக்குகள் பதிவு
பாட்னா: பீகாரில் ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று 55 தொகுதிகளுக்கு நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற இன்றைய தேர்தலில் மாலை 5 மணிவரை மொத்தம் 58% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இன்றைய தேர்தலில் மொத்த வாக்காளர்கள்1,46,93,294 பேர். இதற்காக 14,139 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று நடைபெற்ற தேர்தலில் 57 பெண்கள் உள்பட 776 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக 4 தொகுதிகளில் மாலை 3 மணியுடனும், 8 தொகுதிகளில் மாலை 4 மணியுடனும் வாக்கெடுப்பு நிறைவடைந்தது, இதர 43 வாக்குச்சாவடிகளிலும் வழக்கம்போல் மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று முடிந்தது. நியாயமாகவும், அமைதியாகவும் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், மாநில போலீசாருடன் சேர்ந்து 1,163 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆற்றங்கரையோரப் பகுதிகளில் 38 இயந்திரப் படகுகளில் போலீசார் ரோந்துச் சுற்றி, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணிவரை மொத்தம் 58% வாக்குகள் பதிவாகி இருந்தன.












Click it and Unblock the Notifications