வியாபம் ஊழல்: 12 டன்கள் ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படுகிறது! அமித்ஷாவுடன் சவுகான் சந்திப்பு!!
போபால்: நாட்டை உலுக்கி வரும் மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசின் வியாபம் ஊழல் முறைகேடு தொடர்பாக 12 டன்கள் ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. இதனிடையே இந்த ஊழல் முறைகேடு குறித்து பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில அரசு தேர்வு வாரியமான வியாபத்தில் ஊழல் முறைகேடுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கானோர் பணி நியமனம் பெற்றனர். இந்த விவகாரம் விஸ்வபரூமெடுத்து கடந்த 2 ஆண்டுகாலமாக மாநில அரசு விசாரணை நடத்தி வந்தது.
2,000 பேர் கைது
இதுவரை இந்த வழக்கில் சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளனர். ஆசியாவிலேயே மிகப் பெரிய ஊழலாக கருதப்படுகிற இந்த வியாபம் வழக்கில் தொடர்புடைய 47 பேர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்தும் வருவது பேரதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம்
இந்த ஊழல் வழக்கில் மத்திய பிரதேச ஆளுநர் ராம்நாயக்குக்கும் முதல்வர் சிவராஜ்சிங் சவுகானுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட்டது.
40 பேர் டீம்
சி.பி.ஐ. அதிகாரிகள் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். மொத்தம் 40 பேர் கொண்ட சி.பி.ஐ. டீம் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
12 டன்கள் ஆவணங்கள்
இந்த வழக்கு தொடர்பான சுமார் 12 டன்கள் ஆவணங்கள் டிராக்டர்களில் ஏற்றி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதில் குற்றப்பத்திரிகைகள், குற்றவாளிகளின் வாக்குமூலங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், கேஸ் டைரி ஆகியவை அடங்கும்.
அமித்ஷாவுடன் சந்திப்பு
இதனிடையே இந்த வழக்கு குறித்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவை முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் நேற்று இரவு நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்புக்கு முன்னதாக வியாபம் ஊழல் வழக்கு விவரங்கள் தொடர்பாக போபாலில் அதிகாரிகளுடன் 4 மணிநேரம் சவுகான் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றம் நாளை கூட உள்ள நிலையில் சவுகானின் டெல்லி பயணமும் அமித்ஷாவுடனான சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
கூடுதல் அதிகாரிகள் தேவை
இந்நிலையில் வரும் 24-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில், வியாபம் வழக்கை விசாரிக்க கூடுதல் அதிகாரிகள் தேவை என கோரிக்கை விடுக்கப்பட இருக்கிறது. தற்போது இணை இயக்குநர் அகர்வால் தலைமையில் 40 பேர் கொண்ட் டீம்தான் விசாரணை நாத்து வருகிறது.. இந்த 40 பேர் என்ற எண்ணிக்கை போதாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் ஒன் இந்தியாவிடம் கூறியுள்ளனர்.
மேலும் 150 பேர் ...
இந்த வழக்கில் இதுவரை 185 எப்.ஐ.ஆர்.களை சிபிஐ போட்டுள்ளது. மேலும் 49 மர்மம மரணங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இத்தனை எப்.ஐ.ஆர்.களை வைத்துக் கொண்டு பல கோணங்களில் விசாரணை நடத்த இன்னமும் கூடுதல் அதிகாரிகள் தேவை என கருதுகிறது சிபிஐ. சாரதா சிட் பண்ட் மோசடியை விசாரிக்க 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருந்தனர்.. தற்போது வியாபம் ஊழலை விசாரிக்க குறைந்தது 150 அதிகாரிகள் தேவைப்படுகின்றனராம்.. அதுவும் 20 ஆயிரம் ஆவணங்கள்.. ஆயிரக்கணக்கானோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்கிற போது கட்டாயம் கூடுதல் அதிகாரிகள் தேவை என்கிறது சிபிஐ.