ராஜிவ் காந்தியின் சர்ச்சை கருத்தை ட்விட்டரில் போட்டு பஞ்சாயத்தில் சிக்கிய மே.வ. காங்.
கொல்கத்தா: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்தை அவரது பிறந்த நாளன்று ட்விட்டரில் பகிர்ந்து பஞ்சாயத்தில் சிக்கியுள்ளது மேற்கு வங்க காங்கிரஸ்.
ராஜிவ் காந்தியின் 72-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடம் அமைந்துள்ள வீர பூமியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், அந்தந்த மாநிலங்களிலும் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளால் ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ராஜிவ்காந்தி கூறிய சர்ச்சை கருத்து பதிவிடப்பட்டது.
அதாவது இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, ஒரு பெரிய ஆலமரம் விழும்போது நிலம் அதிரவே செய்யும் என கூறி சீக்கியர் படுகொலையை நியாயப்படுத்தியிருந்தார் ராஜிவ் காந்தி. வரலாற்றுப் பக்கங்களில் இன்றளவும் சர்ச்சைக்குரிய கருத்தாக இது இருந்து வருகிறது.
இந்த சர்ச்சை கருத்தை ராஜிவ் பிறந்த தினத்தையொட்டி மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனே இந்த கருத்து நீக்கப்பட்டுவிட்டது.
தங்கள் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் இப்படி ஒரு கருத்து பதிவாகிவிட்டதாகவும் விளக்கம் கொடுத்துள்ளது மேற்கு வங்க காங்கிரஸ்.