இந்த சேலை "அழக்கா" இருக்கே, எங்க வாங்கின?: நாடாளுமன்றத்தில் புறணி பேசுவோம்.. சுப்ரியா சூலே
நாசிக்: நாடாளுமன்றத்தில் அவை நடந்து கொண்டிருக்கையில் எந்த சேலை எங்கு கிடைக்கும் என்று பேசுவோம் என எம்.பி. சுப்ரியா சூலே தெரிவித்துள்ளார்.
லோக்சபா எம்.பி.யும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சுப்ரியா சூலே மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,
நாடாளுமன்றம்
நான் நாடாளுமன்றத்திற்கு செல்கையில் முதலாவது நபர் ஆற்றும் உரையை கவனிப்பேன். முதல் மூன்று பேரின் உரையை கவனிப்பேன். அதன் பிறகு பேசுபவர்கள் முதல் மூன்று பேர் கூறியதையே தான் திருப்பிக் திருப்பிக் கூறுவார்கள்.
கவனிப்பு
நான்காவது நபர் உரையில் இருந்து யார் பேசுவதையும் கவனிக்க மாட்டேன். நான்காவது நபர் என்ன பேசினார் என்று கேட்டால் எனக்கு தெரியாது.
புறணி
நான்காவது நபர் பேச்சில் இருந்து நான் மற்றும் பிற எம்.பி.க்கள் சேர்ந்து புறணி பேசுவோம். நீங்கள் வகுப்பறைகளில் பேசுவது போன்று. டிவி அல்லது மாடியில் அமர்ந்திருப்பவர்கள் நாங்கள் ஏதோ தேசிய பிரச்சனை பற்றி பேசிக் கொள்வதாக நினைப்பார்கள்.
சேலை
நான் சென்னையைச் சேர்ந்த எம்.பி.யுடன் அவையில் பேசிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். நான் சென்னை வெள்ளம் பற்றி பேசுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாங்களோ இந்த சேலை எந்த கடையில் வாங்கியது என்று பேசிக் கொண்டிருப்போம்.
பியூட்டி பார்லர்
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்தால் நாடாளுமன்றத்தில் பியூட்டி பார்லர்கள், ஃபேஷியல், புடவைகள் பற்றி தான் விவாதம் நடக்கும் என ஆண் எம்.பி.க்கள் என்னை கிண்டல் செய்வார்கள். எங்க சேலையை பற்றி மட்டும் பேசுங்கள் நீங்கள் நாட்டுக்கு ஒரு நல்லதையும் செய்யவில்லை என்று நான் அவர்ளிடம் தெரிவித்தேன்.