நிதீஷ் போனா திரும்ப வர முடியாது.. புதிய முதல்வரை தேர்ந்தெடுப்போம்- சரத் யாதவ்

சரத் யாதவ்தான் ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர். ஆனால் அவருக்கும், நிதீஷ் குமாருக்கும் இடையே எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். நிதீஷ் குமார் தன்னிச்சையாகவே செயல்படுவார். ஆனால் அவருக்குத்தான் கட்சி வட்டாரத்தில் செல்வாக்கு இருப்பதால் சரத் யாதவ் எதுவும் பேச முடியாது.
இந்த நிலையில் நிதீஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளது குறித்து சரத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். எங்களது கட்சி விதிமுறைப்படி யாராவது பதவி விலகினால் மீண்டும் வர முடியாது. எனவே நிதீஷ் குமாரும் மீண்டும் வர மாட்டார். புதிய முதல்வரை நாங்கள் தேர்வு செய்வோம் என்று கூறினார்.
இதற்கிடையே பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி வெளியி்ட்ட ஒரு டிவிட்டர் செய்தியில், அடுத்து எம்.எல்.ஏக்கள் கூடி நிதீஷ் குமாரையை மீண்டும் முதல்வராக தேர்வு செய்வார்கள். அவரும் கட்சி நெருக்கடி காரணமாக மீண்டும் பதவியேற்கிறேன் என்று கூறுவார். இதுதான் நடக்கப் போகிறது என்று கூறியிருந்தார். இதற்குத்தான் சரத் யாதவ் இப்படி பதிலளித்தார்.
லோக்சபா தேர்தலில் பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அங்குள்ள 40 இடங்களில் வெறும் 2 இடங்களில் மட்டுமே அது வென்றது. கடந்த 2009 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அது 20 இடங்களை வென்றிருந்தது நினைவிருக்கலாம். அப்போது பாஜகவுக்கு 12 சீட்கள் கிடைத்தன.
நிதீஷ் குமார் முதல்வரானது முதலே மோடியை பீகாருக்கு வர விடாமல் தொடர்ந்து தடுத்து வந்தார். இதனால் பாஜகவினர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இருப்பினும் நிதீஷ் அலை அப்போது பீகாரில் வீசியதால் அவர்களால் எதிர்ப்பை ஓரளவுக்கு மேல் காட்ட முடியவில்லை. இந்த நிலையில் தற்போது வீசிய மோடி சுனாமியில் நிதீஷ் கட்சி காணாமல் போய் விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications