தெலுங்கானாவை முன்மாதிரி மாநிலமாக்குவோம்... முதல்வர் சந்திரசேகரராவ் சபதம்
ஹைதராபாத்: தெலுங்கானாவை முன்மாதிரி மாநிலமாக்க பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளார் இன்று புதிதாக உதயமான இந்தியாவின் 29 மாநிலமான தெலுங்கானாவின் முதல் முதலமைச்சரான சந்திரசேகரராவ்.
அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுடன் இணைத்து நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கானா பகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அமோக வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று நாட்டின் 29-வது மாநிலமாக தெலுங்கானா மாநிலம் உதயமானது. மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சந்திரசேகர ராவ்,'மக்களின் நலவாழ்வும், முன்னேற்றமுமே இப்புதிய அரசின் முக்கியக் குறிக்கோள் எனத் தெரிவித்தார்.
மேலும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக தெலுங்கானாவை உறுவாக்குவோம். மத்தியில் மட்டுமல்ல அனைத்து அண்டை மாநிலங்களுடனும் நட்பு பாராட்டுவோம் என்றார். அதேபோல், ஊழலற்ற வெளிப்படையான அரசாக இது இருக்கும் என அவர் உறுதி பட தெரிவித்தார்.
ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களில் தெரிவித்தது போல பதவியேற்றதும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப் படும் எனக் கூறிய சந்திரசேகர ராவ், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கிட தேவையான முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.