வெளியான லேட்டஸ்ட் சர்வே.. புது குழப்பம்.. மேற்கு வங்கத்தில் வெல்லப்போவது மம்தா பானர்ஜியா, பாஜகவா?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாங்கள் ஓட்டுப் போட விரும்புவது திரிணாமுல் காங்கிரசுக்குத்தான், ஆனால் வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி பாஜக என மக்கள் கருத்துக் கணிப்பில் சொல்லி குழப்பியுள்ளனர்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சிபிஎன்எக்ஸ் உடன் இணைந்து ஏபிபி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளுமே கடுமையான போட்டியை ஒருவருக்கொருவர் தர உள்ளதை இந்த சர்வே உறுதி செய்துள்ளது.
நிலைமை மாறுகிறதா
முந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் எளிதாக வீழ்த்தும், அதே நேரம் பாஜக ஓரளவுக்கு அதிக சீட்களை வெல்லும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை வேறு மாதிரி மாறியுள்ளது.
வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி
மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று சர்வேயில் மக்களிடம் கேட்கப்பட்டபோது, மேற்கு வங்கத்தில் கணக்கெடுப்பில் பங்கேற்ற 43.61% மக்கள் பாஜக ஆட்சிக்கு வர முடியும் என்று தெரிவித்துள்ளனர். திரிணாமுல் 42.05% ஆதரவை பெற்றது.
இடதுசாரிகள்
அதாவது வாக்கு சதவீதம் அடிப்படையில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்டோர் அடங்கிய கூட்டணிக்கு வெறும், 6.74 சதவீதம் ஓட்டுக்கள்தான். சொல்ல முடியாது, சொல்ல தெரியாது என கூறிய மக்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக உள்ளது. 7.60 சதவீதம் பேர் இந்த பதிலை கூறியுள்ளனர்.
மாறுபட்ட ஓட்டு
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று அதே நபர்களிடம் கேட்கப்பட்டபோது, டி.எம்.சிக்கு 40.07% ஆதரவு தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜிக்காக வாக்களிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். 37.75% பேர் பாஜகவுக்கு ஓட்டு போடுவோம் என்று கூறியுள்ளனர்.
குழப்பம்
அதாவது வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி பாஜக என அதிகம் பேரும், தாங்கள் ஓட்டுப்போடப்போவது திரிணாமுல் காங்கிரசுக்கும் என்று கூறியுள்ளனர் மக்கள். இந்த குழப்பத்தால் மம்தா பானர்ஜி குழம்பிப் போயுள்ளார். பாஜக எந்த முறைகேட்டிலும் ஈடுபடாமல் 8 கட்ட தேர்தல்களையும் கடந்துவிட வேண்டும் என்று தொண்டர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார். கருத்துக் கணிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் வேலையை பாருங்கள் என அவர் கூறியுள்ளார்.