வெள்ளையனே வெளியேறு அப்போ... பாஜகவே வெளியேறு இப்போ... அதிரடி காட்டும் மம்தா!
பாஜகவே வெளியேறு என்பதுதான் வரும் பொதுத் தேர்தலில் எங்கள் கொள்கை முழக்கமாக இருக்கும் என்று மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது.
கொல்கத்தா: வரும் பொதுத்தேர்தலில் பாஜகவே வெளியேறு என்பதுதான் திரிணாமுல் காங்கிரசின் கொள்கை முழக்கமாக இருக்கும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி தொடங்கி வைத்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பவள விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த முடிவுசெய்துள்ளதாகவும், வரவுள்ள 2019-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவே வெளியேறு என்பதை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மம்தா பானர்ஜி கூறுகையில், " மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பொதுமக்களின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி உள்ளது. ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
எனவே, மத்திய அரசுக்கு எதிராக செயல்பட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நாட்டை இரண்டாக பிரிக்க நினைக்கிறது. ஆனால் அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
பாஜகவின் அரசியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வரவுள்ள 2019-ம் ஆண்டு நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் பாஜகவே வெளியேறு என்பதே எங்களின் முழக்கமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications