'யாஸ் புயலுக்கு மோடி அறிவிச்சாரே ரூ.500 கோடி நிவாரணம் .. அதில் ஒரு பைசா கூட இன்னும் வரவில்லை'.. சீறும் மம்தா!
கொல்கத்தா: யாஸ் புயல் சேதம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிவாரண தொகை இதுவரை மேற்கு வங்கத்துக்கு வழங்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
கடந்த மாதம் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை யாஸ் புயல் கடுமையாக தாக்கியது. புயலின் கோரத்தாண்டவத்தால் பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு சென்று புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார்.

நிவாரண தொகை ஒதுக்கீடு
இதனையடுத்து புயல் பாதித்த மாநிலங்களுக்கு ரூ.1,000 கோடியை பிரதமர் மோடி ஒதுக்கீடு செய்தார். ஒடிசா மாநிலத்துக்கு ரூ.500 கோடியும், மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சேர்த்து ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்தார். இதற்கிடையே மேற்கு வங்கத்தில் பிரதமர் வருகையின்போது பெரிய பிரச்னையே நடந்து முடிந்து விட்டது.

மம்தா குற்றச்சாட்டு
பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் புயல் சேத விவரம் குறித்து கூட்டம் நடத்தியபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதை புறக்கணித்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இதற்கு விளக்கம் அளித்தார் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் யாஸ் புயல் நிலவரத்தை பிரதமர் மோடி பார்வையிட்டு சென்று இதுவரை எந்த நிதியுதவியும் மேற்கு வங்கத்திற்கு வழங்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகள் நிதி
மேற்கு வங்க விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் கிருஷக்பந்து திட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். இந்த் திட்டத்தின்படி விவசாயிகள் இப்போது ஒரு ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட சாகுபடி நிலங்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட்ட வருடாந்திர நிதி உதவி பெறுவார்கள் என்று மம்தா பானர்ஜி கூறினார்.

ஒரு பைசா கூட வரவில்லை
மத்திய அரசு விவசாயிகளுக்கு குறைந்த பணத்தை தருகிறது. ஆனால் அனைத்து விவசாயிகளும் இதனை பெறவில்லை. யாஸ் புயல் சேதத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி முதற்கட்ட நிவாரண தொகை ஒதுக்கீடு செய்தார். இதில் இது தொடர்பாக இதுவரை எந்த பணமும் மேற்கு வங்கத்துக்கு வரவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications