குஜராத் பிரசாரத்தில் பாய்ந்த வந்த கற்கள்.. "என்ன தவறு செய்தேன்" என உருகிய கெஜ்ரிவால்! பரபரப்பு
காந்தி நகர்: குஜராத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் இறங்கியிருந்த நிலையில், திடீரென கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
குஜராத்தில் வரும் டிச. 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாபைப் போலவே குஜராத்திலும் இப்போது ஆம் ஆத்மியும் களமிறங்கி உள்ளது.
இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
இதுதானா குஜராத் மாடல்? பெண்கள் நிலை ரொம்பவே மோசம்! தேர்தலில் வெறும் பார்வையாளராக அமர வைத்த கட்சிகள்
குஜராத்
டெல்லியில் ஆம் ஆத்மி அமைச்சர்கள் குறித்து அடுத்தடுத்து சர்ச்சைகள் வெளியானாலும் கூட அது குறித்துக் கவலைப்படாமல் முழு வீச்சில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்தில் இறங்கியுள்ளார். பல சர்ச்சை தகவல்கள் வெளியாகி வரும் சூழலிலும் அது குறித்துக் கவலைப்படாமல் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கி உள்ளார். குஜராத்தில் இந்தத் தேர்தலுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறி வருகிறார். இதற்கிடையே நேற்று பொதுமக்களிடையே கெஜ்ரிவால் பேரணியாகச் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென கல் வீச்சு சம்பவம் நடந்து பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது
கல் வீச்சு
சூரத்தில் கெஜ்ரிவால் பேரணியாகச் சென்று கொண்டிருக்கும் போது இந்த கல் வீச்சு சம்பவம் நடந்ததாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இருப்பினும், அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டபடி தனது பிரசாரத்தைத் தொடர்ந்தார். அதன் பிறகு பொதுமக்களிடையே பேசிய கெஜ்ரிவால், "கடந்த 27 ஆண்டுகளில் பாஜக எந்த வேலையும் செய்யவில்லை.. மாநிலத்தில் எங்கும் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. அவர்கள் அராஜகத்தை மட்டும் செய்கிறார்கள். இப்போதுதான் எங்கள் மீது கல்லை எறிந்துள்ளனர். கடந்த 27 ஆண்டுகளில் அவர்கள் உழைத்திருந்தால் எங்கள் மீது இப்போது கல்லெறிய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது..
என்ன தவறு செய்தேன்
அவர்கள் என் கண்ணை நோக்கி கற்களை எரிந்துள்ளனர். நான் என்ன தவறு செய்தேன்? பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கட்டுவேன் என்று சொல்கிறேன். நீங்கள் செய்த பணிகளை எனக்குக் காட்டுங்கள், சும்மா ஏமாற்ற வேண்டாம்" என்றார். கெஜ்ரிவாலை மக்கள் மலர்களைத் தூவி வரவேற்பதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜகவினர் கற்களை வீசுவதாக ஆம் ஆத்மி வேட்பாளர் அல்பேஷ் கதிரியா குற்றஞ்சாட்டினார்.
விளக்கம்
இருப்பினும், சூரத் போலீசார் ஆம் ஆத்மியின் இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கெஜ்ரிவால் பேரணி மிகவும் அமைதியாக நடந்ததாகவும் கல்வீச்சு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் சூரத் போலீசார் தெரிவித்தனர். பேரணியில் கெஜ்ரிவாலை நோக்கி கல் வீச்சு சம்பவம் நடந்ததாகப் போலியான செய்தி தரப்படுவதாகவும் அதில் 1% கூட உண்மை இல்லை என்றும் டிசிபி பினாகின் பர்மர் தெரிவித்தார். இப்படி இரு தரப்பும் மாறி மாறி கூறி வருகின்றனர்.
குழந்தை காயம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், குஜராத்தில் ஆம் ஆத்மி பிரசார கூட்டத்தில் கற்கள் வீசப்பட்டதாக ஆம் ஆத்மி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தது. இந்த கல் வீச்சில் ஒரு குழந்தையும் கூட காயமடைந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இத்தாலியா குற்றஞ்சாட்டியிருந்தார். தோல்வி பயத்தில் பாஜகவினர் இப்படி நடந்து கொள்வதாகவும் அவர் சாடியிருந்தார்.