பேஸ்புக்கில் பார்ப்பதும் பொய்.. வாட்ஸ்அப்பில் வருவதும் பொய்.. பெங்களூர் டாக்டர்கள் புலம்பல்!
பெங்களூரு: சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் உதவி கேட்டு வரும் தகவல்கள் அத்தனையும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்தும் சம்பவம் பெங்களூரு மருத்துவமனையொன்றில் நடந்துள்ளது.
வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், அடிக்கடி உதவிகோரும் மெசேஜ்கள் பார்வேர்ட் ஆவது வழக்கம். ரத்தம் கேட்டோ, காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க கோரியோ வரும் மெசேஜ்கள்தான் அவை. அதுபோன்ற மெசேஜை பார்த்ததும், பெரும்பாலானோரும், உண்மை தன்மையை ஆராயாமல் அடுத்தவர்களுக்கு பார்வேர்ட் செய்துவிட்டு சமூக கடமையாற்றிய திருப்தியடைவர்.

எல்லோரும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுங்க..
சில நேரங்களில் இன்னும் அபத்தமாக, 2 கோள்கள் மோதப்போகின்றன, இதுபோன்ற நிகழ்வு மனிதர்களை பாதிக்கும், இரவு எல்லோரும் போனை சுவிட்ஸ் ஆப் செய்துவிடுங்கள், பிபிசியில் சொன்னாங்க... சிஎன்என்னில் சொன்னாங்க.. என்பது போன்ற பேத்தல் மெசேஜ்களும் வரும். ஆனால் இதுபோன்ற தகவல் என்றால் யாரும் தலையை பிய்த்துக்கொள்வதில்லை. உதவி கேட்டு வரும் மெசேஜ்களுக்குதான் மதிப்பு அதிகம்.

நம்பகத்தன்மை இல்லை
இதுபோன்ற உதவி கோரும் மெசேஜ் பார்வேர்டிங் சேவையால் பலருக்கு நன்மை கிட்டும் என்றபோதிலும், இதில் நம்பகத்தன்மை மிகவும் குறைவு என்பதை உணர வேண்டியதும் அவசியம். சமூக வலைத்தளங்களில் மெசேஜ் போடுபவரை இனம் காணுவது என்பது, பெருங் கூட்டத்தில் ஒருவர் கல்லெறிவதை கண்டுபிடிப்பதை போல கஷ்டமானது.

பெங்களூரு மருத்துவமனை
பெங்களூருவிலும் அதேபோன்ற ஒரு வாட்ஸ்அப் போலி மெசேஜ், ஒரு பிரபல மருத்துவமனையையே ஸ்தம்பிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. சாம்ராஜ்பேட்டை பகுதியிலுள்ளது கெம்பேகவுடா இன்ஸ்ட்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (கிம்ஸ்) என்ற அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் தலையில் காயங்களுடன் 17 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர், சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவரை பற்றி தெரிந்தவர்கள் மருத்துவமனையை அணுகலாம் என்றும் ஒரு தகவல் வாட்ஸ்அப்பில் பரவியது.

பயந்து போன தந்தை
இந்நிலையில்தான் தியாகராஜா நகர் பகுதியை சேர்ந்த தேங்காய் டீலர் சித்தராஜு என்பவருக்கும் இந்த தகவல் நண்பர் மூலம், கிடைத்துள்ளது. இவரது மகன் ஹேமந்த் யோகா வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பாத நிலையில், தனது மகன்தான் கிம்ஸ் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்து மருத்துவமனைக்கு ஓடியுள்ளார் சித்தராஜு.

மருத்துவமனை ஸ்தம்பிப்பு
அங்கு வாட்ஸ்அப் மெசேஜ் குறித்து சொல்லியதும், மருத்துவர்களும், நர்சுகளும் சேர்ந்து மருத்துவமனையின் அனைத்து வார்டுகளிலும் சல்லடை போட்டு தேடியுள்ளனர். ஆனால் பல மணி நேரம் தேடிய பிறகும் அதுபோன்ற எந்த நபரும் மருத்துவமனையில் அட்மிட் ஆகவில்லை என்பது தெரியவந்தது. பராஸ் என்ற மருத்துவர் இதுகுறித்து கூறுகையில், வாட்ஸ் அப் செய்தியை வைத்து 2 மணிநேரம் தேடினோம். இறுதியாக, அந்த சிறுவன் மும்பையில் இருப்பதாக தகவல் வெளியானது. அதன்பிறகு மருத்துவமனை இயல்பு நிலைக்கு திரும்பியது என்றார்.

ரத்தம் வேண்டும்
கிம்ஸ் மருத்துவமனையின் டாக்டர்கள் கூறுகையில், சில நேரங்களில், கிம்ஸ் மருத்துவமனையிலுள்ள நோயாளி ஒருவருக்கு குறிப்பிட்ட வகை ரத்தம் தேவை என்று மெசேஜ் பரப்பிவிடப்படுகிறது. இதை நம்பி சிலர் ரத்தம் தருவதற்காக மருத்துவமனைக்கு வந்து நேரத்தை விரையம் செய்து திரும்பி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன. சில நேரங்களில் மருத்துவ உபகரணங்கள், எங்கள் மருத்துவமனையில் இலவசமாக தரப்படுவதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிவிடப்படுகிறது. இதை நம்பியும் பல நோயாளிகள் ஆஸ்பத்திரி வந்து திரும்பி செல்கின்றனர் என்றார்.

ஊடகங்களுக்கு பொறுப்புள்ளது
ஊடகங்களில் வெளியாகும் செய்திக்கு நம்பகத்தன்மை அதிகம். தவறு நடந்தால், பொறுப்பாளியாக வேண்டிவரும் என்பதால் ஊடகங்கள் செய்திகளை கவனத்தோடு வெளியிடும். ஆனால் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை செய்திகளாக பார்த்து யாரும் நம்பிக்கை வைக்காமல் இருப்பதே நல்லது.












Click it and Unblock the Notifications