நான் தாவூத் இப்ராஹிமை சந்தித்தபோது...: டெரர் பேட்டியை நினைவுகூர்ந்த பத்திரிக்கையாளர்
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருப்பார் என பல ஆண்டுகளுக்கு முன்பு அவரை சந்தித்து பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர் ஜாய் சி. ரபேல் தெரிவித்துள்ளார்.
1981ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் ஷபிர் இப்ராஹிம் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஷபிரை தாவூதின் நண்பர்களாக இருந்து எதிரிகளான அமிர்சாதா மற்றும் ஆலம்செப் ஆள் வைத்து கொலை செய்தனர்.
இந்த கொலை நடந்த 2வது நாள் கரண்ட் என்ற வாரப் பத்திரிக்கையின் ஆசிரியர் பத்திரிக்கையாளர் ஜாய் சி. ரபேலை அழைத்து தாவூதை பேட்டி கண்டு செய்தி வெளியிடுமாறு கூற அவரும் செய்துள்ளார். தாவூதை சந்தித்தது குறித்து ஜாய் ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
தாவூத் மிகவும் சாதாரணமாக இருந்தார். அவர் எதிரணியினரை மிரட்டி எனக்கு பேட்டி அளிக்கவில்லை. மாறாக நடந்த சம்பவம் குறித்து பொறுமையாக விளக்கினார். நிறைய பேசினார். ஆனால் சிரிக்கவில்லை. நான் தாவூதை சந்தித்தபோது அவர் தாதாவாக மட்டுமே இருந்தார்.
அவர் எதிர்காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் விரோதியாவார் என நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. தனது சகோதரரை கொன்றவர்கள் தனது பழைய நண்பர்கள் என்று கூறி அவர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை என்னிடம் அளித்தார்.
செய்தியை பிரசுரிக்கும் முன்பு தன்னிடம் காட்டுமாறு கூறினார். நானும் அவரது வீட்டிற்கு சென்று செய்தியை அளித்தேன். அவரது ஆள் ஒருவர் படித்துவிட்டு பிரசுரிக்கலாம் என்றார். இதையடுத்து கதையை பத்திரிக்கை ஆசிரியர் ஏற்றுக் கொண்டாரா என தாவூத் கேட்டதற்கு இன்னும் இல்லை என்றேன்.
உடனே அவர் ஒரு டாக்சியை பிடித்து என்னுடன் அவரது ஆட்கள் இருவரை அனுப்பினார். தாவூத் பற்றி செய்தி பிரசுரிக்க அனுமதிக்கப்படும் வரை அவர்களை அலுவலகத்தில் இருக்குமாறு உத்தரவு. செய்தி ஒருவகையாக பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே எனக்கு நிம்மதியாக இருந்தது என்றார்.