அம்பலமாகும் இந்திரா குடும்பத்து ரகசியங்கள்.. யார் இந்த நட்வர்சிங்? சோனியா மீது கோபம் ஏன்?
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கும் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கும் குடைச்சல் கொடுக்கும் வகையில் சுயசரிதையை வெளியிட்டு குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங்.
காங்கிரஸ் தலைமையிலான முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நட்வர்சிங் ஊழலில் சிக்கி ராஜினாமா செய்தார். பின்னர் காங்கிரஸை விட்டு நீக்கப்பட்ட கையோடு தனக்கு தெரிந்த 'காங்கிரஸ் ரகசியங்களை' அம்பலப்படுத்திக் கொண்டு வருகிறார்.
தற்போது 'One life not enough' என்ற சுயசரிதையை வெளியிடுவதுடன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பல அதிரடி விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். இதனாலேயே தானும் புத்தகம் எழுதுவேன்.. அதில் உண்மைகள் வரும் என்று சோனியா கொந்தளித்துப் போய் பதில் கொடுத்தார்.
யார் இந்த நட்வர்சிங்?
- இந்திய வெளியுறவுத் துறையில் 30 ஆண்டுகாலம் அதிகாரியாக பணியாற்றியவர் நட்வர்சிங்.
- சீனா, அமெரிக்கா மற்றும் யுனிசெப் ஆகியவற்றில் முக்கிய பணிகளுக்கு அதிகாரியாக செயல்பட்டவர் நட்வர்.
- 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தியின் கீழ் பிரதமர் அலுவலக பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அன்று முதல் இந்திரா குடும்பத்துக்கு நெருங்கிய நபராக உருவெடுத்தார்.
- 1984ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை செயலராக பணியாற்றிய நிலையில் தமது அரசு பணியை ராஜினாமா செய்தார் நட்வர்சிங்.
- 1984ஆம் ஆண்டு நட்வர்சிங்குக்கு மத்தியாரசு பத்மபூஷண் விருது அளித்தது.
- 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இணை அமைச்சராக பதவி வகித்தார்.
- 1985-க்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் நட்வர்சிங் உருவெடுத்தார்.
- 1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி என்.டி. திவாரி, அர்ஜூன்சிங் ஆகியோருடன் சேர்ந்து அனைத்திந்திய இந்திரா காங்கிரஸ் (திவாரி) என்ற தனிக்கட்சியை நடத்தினார்.
- 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சோனியா கை ஓங்கிய பின்னரே மீண்டும் காங்கிரஸில் இணைந்தார் நட்வர்சிங்.
- 1998- 99 ஆம் ஆண்டு 12வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் நட்வர்சிங்.
- 2002ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யானார் நட்வர்சிங்.
- 2004ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்த போது வெளியுறவுத் துறை அமைச்சரானார் நட்வர்சிங்.
- 2005ஆம் ஆண்டு ஈராக்குக்கு உணவு, மருந்துக்கு எண்ணெய் என்ற ஐ.நா. திட்டத்தில் நடந்த ஊழலில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்தார் நட்வர்சிங்.
- 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் இருந்தும் நட்வர்சிங் நீக்கப்பட 2008ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.
- பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அக்கட்சியிலும் இருந்து நட்வர்சிங் நீக்கப்பட்டார்.
சோனியா மீது ஏன் கோபம்?
- 2005ஆம் ஆண்டு உணவுக்கு எண்ணெய் ஊழலில் தன்னையும் மகனையும் சோனியா காப்பாற்றுவார் என நம்பியிருந்தார் நட்வர்சிங்.
- இந்திரா குடும்பத்துக்கு நீண்டகால நண்பரான தனக்கு சோனியா துரோகம் செய்து கட்சியைவிட்டே நீக்கினார் என்பது நட்வர்சிங்கின் குமுறல்
- இதனாலேயே சோனியாவை ஒரு சர்வாதிகாரி, மாக்கியவெல்லி என்றெல்லாம் விமர்சித்தார் நட்வர்சிங்.
- திடீரென நட்வர்சிங் சுயசரிதை என்ற பெயரில் தனக்கு தெரிந்த இந்திரா குடும்பத்து ரகசியங்களை பகிரங்கப்படுத்த சோனியா கொந்தளித்துப் போனார்.
- தன்னை நேரில் சந்தித்து சோனியா மன்னிப்பெல்லாம் கேட்டார் என்கிறார் நட்வர்சிங்.. அந்த அளவுக்கு சோனியா குடும்பத்து தூக்கத்தை கெடுத்திருக்கிறது நட்வர்சிங்கின் கலகக் குரல்.