தமிழக காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? காய் நகர்த்தும் முக்கிய தலைகள்
டெல்லி: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவிவருகிறது. ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் தொடங்கி அமெரிக்கை நாராயணன், விஜயதாரணி வரை பலரும் டெல்லி தலைமையிடம் விண்ணப்பித்துள்ளானராம். அதோடு மாநில தலைவர் பதவி கேட்டு ஆளாளுக்கு ஒரு மேலிடத் தலைவரை பிடித்து காய் நகர்த்தி வருகின்றனராம்.
லோக்சபா தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் கட்சியில் பல் வேறு மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மாநில தலைவர்கள், நிர்வாகிகள் மாற்றப்படலாம் என தகவல்கள் வருகின்றன.
ஜி.கே.வாசனுக்கு அதிக ஆதரவு
தமிழகத்தில் தலைவர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இந்த கோதாவில் ஜி.கே.வாசனுக்கு ஆதரவாக பல குரல்கள் ஒலிக்கின்றன.
விட்டுக்கொடுக்கும் வாசன்
முன்னாள் எம்.பி.க்கள் ராம சுப்பு, சித்தன், எம்.எல்.ஏ.க்கள் ஜான் ஜேக்கப், பிரின்ஸ் மற்றும் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் ஜி.கே.வாசனை தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் வாசனை ஆதரிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாசனோ, தனக்கு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காத பட்சத்தில் ஞானதேசிகனே நீடிக்கட்டும் என்கிறார்.
கார்த்தி சிதம்பரம்
ப.சிதம்பரம் தனது மகன் கார்த்திக்கு தலைவர் பதவியை வாங்கிக் கொடுக்க விரும்புவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், கராத்தே தியாகராஜன், செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழக காங்கிரஸ் தலைவராக கார்த்தி சிதம்பரம் நியமிக் கப்பட்டால் கட்சிக்கு இளரத்தம் பாய்ச்சியதுபோல் இருக்கும் என்கின்றனர்.
வசந்தகுமார் விண்ணப்பம்
அதேநேரத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வர்களில் டெபாசிட் வாங்கிய ஒரே வேட்பாளரான எச்.வசந்தகுமார், தனக்கு தலைவர் பதவி தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் இவர் நேரடியாக சோனியா காந்தியிடம் இதுதொடர்பாக அடிக்கடி பேசுகிறார், மெயில் அனுப்புகிறார் என்கின்றனர் இவரது ஆதரவாளர்கள்.
பீட்டர் அல்போன்ஸ்
கட்சிக்காக சுமார் 40 ஆண்டு களுக்கும் மேலாக உழைத்துள்ளேன். தலைவராக எனக்கும் தகுதி இருக்கிறது என்கிறார் பீட்டர் அல்போன்ஸ். இவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மூலம் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.
ஜே.எம்.ஆருண்
குலாம் நபி ஆசாத் மூலம் காய்நகர்த்தும் ஜே.எம்.ஆருண், தமிழகத்தில் சிறுபான்மையர் ஒருவருக்கு கட்சித் தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்கிறார். இவர்களுக்கிடையே, ராகுல் காந்தி மற்றும் குலாம் நபி ஆசாத் மூலம் மேலிடத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார் சுதர்சன நாச்சியப்பன்.
அமெரிக்கை நாராயணனும் அப்ளை
தான் செய்து வரும் சமூக சேவைகளையும் செல்லும் கிராமங்களையும் பட்டியலிட்டு தினமும் ராகுலுக்கும் சோனியாவுக்கு மெயில் அனுப்பி வருகிறார் அமெரிக்கை நாராயணன்.
விடாத விஜயதாரணி
தமிழக காங்கிரஸுக்கு பெண் ஒருவர் தலைவரானால் பெண்களையும் இளைஞர்களையும் ஈர்க்க முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் எம்.எல்.ஏ. விஜயதாரணி.
காங்கிரஸ் தலைமையின் கவனம்
ஆனால், கட்சித் தலைமையோ, லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதில்தான் இப்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கையைப் பற்றி யோசிக்குமாம். சத்தியமூர்த்தி பவனின் தலைவராக வர யாருக்கு கொடுப்பினை இருக்கிறதோ?