ட்விஸ்ட்! பிரியங்கா காந்தி கையில் விழுந்த முக்கிய பொறுப்பு! தொடரும் குழப்பம்! இமாச்சல் முதல்வர் யார்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப் பெரியளவில் வெற்றி பெற்ற பிறகும் கூட குழப்பம் தொடர்கிறது. இன்னுமே கூட இமாச்சல பிரதேசத்திற்கு யார் முதல்வர் என்பதில் குழப்பம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவ.12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவியது. ஆம் ஆத்மி களமிறங்கிய போதிலும், குஜராத் தேர்தல் காரணமாக இமாச்சலில் அவர்கள் பெரியளவில் கவனம் செலுத்தவில்லை.
இமாச்சல் தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படுவது வழக்கம். இந்தத் தேர்தலிலும் அதுவே தொடர்ந்தது.
இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங். ஆட்சி-புதிய முதல்வர் ரேஸில் 7 'தலைகள்'- இன்று முடிவு அறிவிப்பு!
இமாச்சல பிரதேசம்
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்கு மொத்தம் 70 தொகுதிகள் உள்ள நிலையில், காங்கிரஸ் அதில் 40இல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. பதிவான வாக்குகளின் அடிப்படையில் பார்க்கும் போது, பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வெறும் 0.90% வாக்குகள் மட்டுமே வித்தியாசம். காங்கிரசுக்கு 43.90% வாக்குகள் விழுந்த நிலையில், பாஜகவுக்கு 43% வாக்குகள் விழுந்துள்ளது. இருப்பினும், பாஜகவால் 25 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
தொடரும் குழப்பம்
கடந்த 2018இல் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் (இப்போது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது) மாநிலங்களில் காங்கிரஸ் கடைசியாக ஆட்சியைப் பிடித்து இருந்தது. இப்போது சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின், காங்கிரஸ் மீண்டும் ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இருந்த போதிலும், இந்த வெற்றியைக் காங்கிரஸ் கட்சியால் முழுவதுமாக கொண்டாட முடியவில்லை. ஏனென்றால் அங்கு அடுத்த முதல்வர் யார் என்பதில் இன்னுமே குழப்பம் நீட்டிக்கிறது. முதல்வர் பதவிக்கு அங்குப் பலரும் முயல்வதால், இன்னுமே கூட குழப்பம் தொடர்கிறது.
புதிய யுக்தி
நேற்று வெள்ளிக்கிழமை நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் வழக்கம் போல முதல்வர் பதவி குறித்து டெல்லி தலைமை முடிவு செய்யும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினர். இதற்கிடையே முதல்வர் பதவி தேர்வு தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இரு மாநில தேர்தல்களையும் காங்கிரஸ் சற்று வித்தியாசமாகவே கையாண்டது. எப்போது ராகுல் காந்தி தான் பிரசாரத்தின் முகமாக இருப்பார். ஆனால், இந்த முறை ராகுல் பாத யாத்திரையில் பிஸியாக இருந்ததால், பிரசாரத்திற்கு வரவில்லை. குஜராத்தில் கூட ஓரிரு நாட்கள் அவர் பிரசாரம் செய்த போதிலும், இமாச்சல பிரதேசத்தில் சுத்தமாக பிரசாரம் செய்யவில்லை.
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி தலைமையில் தான் இமாச்சலப் பிரதேச தேர்தலைக் காங்கிரஸ் எதிர்கொண்டது. பிரியங்கா காந்தி மற்றும் அக்கட்சியின் புதிய தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் இணைந்து பல பேரணிகளுடன் நடத்தினார்.. தேர்தலுக்கான வியூகங்களையும் தொடர்ந்து வகுத்துத் தந்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் பாஜகவின் பிரசார யுக்தியைத் தோற்கடித்ததிலும் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்ததிலும் பிரியங்கா காந்தி செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறி பல மூத்த தலைவர்களும் அவரை பாராட்டினர்.
முதல் முறை
பிரியங்கா காந்தி பிரசாரத்தை முன்னெடுத்து காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் வெல்வது இதுவே முதல்முறை. இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் உத்திர பிரதேச சட்டசபைத் தேர்தலில் தலைமை தாங்கிய நிலையில், இங்குக் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அங்கு கற்ற பாடங்களைக் கொண்டு இப்போது காங்கிரசுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளார் பிரியங்கா காந்தி. இமாச்சல் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி பல கூட்டங்களில் அக்னிபாத், பணவீக்கம், வேலையின்மை மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளை எழுப்பினார். இது நல்ல முறையில் ஓர்க்அவுட் ஆனது.
பெரிய பொறுப்பு
இமாச்சல பிரதேச வெற்றிக்கு பிரியங்கா காந்தியின் பங்கு தவிர்க்க முடியாதது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் முதல்வர் பொறுப்பைப் பிரியங்கா காந்தியே முடிவு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லி தலைமை முதல்வரை முடிவு செய்யும் என எம்எல்ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட பிரியங்கா காந்தியே யார் முதல்வர் என்பதைத் தேர்ந்தெடுப்பார் எனச் சொல்லப்படுகிறது. மல்லிகார்ஜுன் கார்கேவுடன் இணைந்து முதல்வர் பதவியை யாருக்குத் தரலாம் என்பதை முடிவெடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வர் ரேஸ்
அங்கு முதல்வர் பதவிக்குப் பலரும் கடுமையாக முயன்று வருகின்றனர். குறிப்பாக இமாச்சல் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங்கிற்கு ஆதரவாக நேற்று எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு முன்பு பேரணி நடத்தப்பட்டது. மூன்று முறை எம்.பி.யான பிரதீபா சிங், மறைந்த இமாச்சல் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங்கின் மனைவி ஆவர். எனவே, அவருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று கோஷம் அதிகமாக உள்ளது. அவரைத் தவிர சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் ரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.