''தெலுங்கு நாடு என்று வைக்காமல், ஆந்திரா என்று பெயர் வைத்ததே முதலில் தவறு...''
ஹைதராபாத்: மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்தபோதே தெலுங்கு நாடு என்று பெயர் வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்காமல் ஆந்திரப் பிரதேசம் என்று வைத்து விட்டு இப்போது தெலுங்கானாவைக் குறை சொல்வது கடுமையாக கண்டித்தக்கது என்று தெலுங்கானாவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ தேவிந்த் ரெட்டி என்பவர் சாடியுள்ளார்.
இதுகுறித்து மாநில சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது அவர் பேசுகையில், சீமாந்திரா தலைவர்களுக்கு ஹைதராபாத்தையும், தெலுங்கானாவையும் உரிமை கோர உரிமையே கிடையாது.
நிஜாம் மன்னர்களின் ஆட்சிப் பிடியிலிருந்து தெலுங்கானா மக்கள் விடுபட ராயலசீமா மக்களும், கடலோர ஆந்திர மக்களும்தான் உதவினர் என்பதை நாங்கள் மறக்கவில்லை, மறுக்கவும் இல்லை. ஆனால் தெலுங்கானாவின் வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொண்ட சீமாந்திரா தலைவர்கள், தெலுங்கானாவைப் புறக்கணித்ததும் மறக்க முடியாத உண்மைதான். எனவே தெலுங்கானாவையும், ஹைதராபாத்தையும் உரிமை கோர அவர்களுக்கு யோக்கியதை இல்லை.
மொழிவாரி அடிப்படையில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது என்றால் தமிழ்நாடு என்று தமிழகத்திற்குப் பெயர் வைத்தது போல, ஆந்திரப் பிரதேசத்திற்கும் தெலுங்குநாடு என்றுதானே பெயர் வைத்திருக்க வேண்டும். அப்போதே தவறு நடந்து விட்டது. ஆனால் அந்தப் பெயரை வைக்காமல் போனதற்குக் காரணம், தெலுங்கானா மக்களை ஒடுக்கும் நோக்கில்தான். உளவியல் ரீதியாக தெலுங்கானா மக்களை அப்போதே ஒடுக்கும் வேலைகளை செய்துள்ளனர். சம்பந்தே இல்லாமல் ஆந்திரப் பிரதேசம் என்று வைத்து விட்டனர்.
மேலும் இந்திய யூனியுடன் ஹைதராபாத்தைச் சேர்த்த பின்னர் உருதுவை அதிகாரப்பூர்வ மொழியாக்காமல் அதையும் புறக்கணித்துள்ளனர். தெலுங்கு தெலுங்கு என்று கூறிக் கொண்டே சீமாந்திரா தலைவர்கள் ஆங்கிலத்தை நன்றாக கற்று உயர் பொறுப்புகளுக்கு வந்து உட்கார்ந்து விட்டனர். தெலுங்கானா மக்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.
தெலுங்கானாவைப் புறக்கணித்து ஒடுக்கியதே நக்சலிசம் வளர்ந்து விஸ்வரூபம் எடுக்க முக்கியக் காரணம் என்றார் தேவிந்த் ரெட்டி.