மோடி பிரதமர் வேட்பாளரானதால் மகிழ்ச்சியில் காங்கிரஸ்!!: 2 'ஏட்டையாக்கள்' கதை!
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததை காங்கிரஸ் வெளியே கடுமையாக எதிர்த்தாலும், உள்ளுக்குள் மகிழ்ச்சியில் தான் இருக்கிறது.
காரணம், கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரஸ் நடத்திய ஆட்சி அப்படி.
முதல் 5 ஆண்டுகள் உண்மையிலேயே நல்லாட்சியைத் தான் தந்தது காங்கிரஸ். ஆனால், 2009ம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸ் அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்தன.
கடும் புகார்களில் மத்திய அரசு:
ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த், நிலக்கரி என எல்லாமே பல்லாயிரணக்கணக்கான கோடிகள் சார்ந்த ஊழல் புகார்கள். மேலும் விலைவாசி உயர்வு பிரச்சனையும் பொருளாதாரத் தேக்கமும் சேர்ந்து கொண்டு மத்திய அரசை பாடாய்படுத்தி வருகின்றன.
அத்தோடு கற்பழிப்புகள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளும் வெடித்தவண்ணம் உள்ளன. இவை மாநில அரசு சார்ந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் தான் என்றாலும் இந்தப் புகாரில் இருந்து மத்திய அரசும் தப்பவில்லை.
எப்படி சமாளிப்பது?:
இப்படிப்பட்ட நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் எதைச் சொல்லி ஓட்டு கேட்பது என்பதே பிரச்சனையாகிவிட்டது. அரசு மீதான ஊழல் புகார்களை எதிர்க் கட்சிகள் முன் நிறுத்தினால் அதை 'கவுண்டர்' செய்யும் நிலையில் காங்கிரஸ் இல்லை என்பதே நிதர்சனமான நிலைமை.
இந் நிலையில் உணவுப் பாதுகாப்பு சட்டம் போன்ற சில திட்டங்கள் மட்டுமே காங்கிரசுக்கு தேர்தலில் துணை நிற்கப் போகின்றன.
மதசார்பின்மை என்ற கொடி:
இந்தச் சூழலில் மோடியை பாஜக முன் நிறுத்தியுள்ளதால், அவருக்கு எதிராக மதசார்பின்மை என்ற கொடியை உயரமாகத் தூக்கி தப்பிவிடலாம் என்பது காங்கிரசின் கணக்கு. அது எப்படி?...
முடிவு செய்யப் போவது உ.பி:
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அடுத்து யார் ஆட்சி அமைக்கப் போவது என்பதை தீர்மானிப்பதில் உத்தரப் பிரதேசம் மிக முக்கிய இடம் பிடிக்கப் போகிறது. அடுத்தடுத்து வரும் கருத்துக் கணிப்புகள் தேர்தலில் பாஜக தான் தனிக் கட்சியாக அதிக இடங்களைப் பிடிக்கும் என்கின்றன. ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அல்ல. ஆட்சியைப் பிடிக்க அந்தக் கட்சிக்கு 70 முதல் 80 பிற கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களின் ஆதரவு தேவைப்படலாம்.
பிற கட்சிகளின் நிலை:
அதே நேரத்தில் காங்கிரஸ் மூன்றாவது இடத்தையும், இந்த இரு கட்சிகளையும் சாராத பிற மாநிலக் கட்சிகளும் இடதுசாரிகளும் சேர்ந்து தான் அதிகபட்சமான இடங்களைப் பிடிக்கப் போகின்றன என்கின்றன கருத்துக் கணிப்புகள். இதில் பெரும்பாலானாவை மதசார்பின்மை கொள்கையை கடைபிடிக்கும் கட்சிகள்.
80 எம்பிக்களின் ராஜா உ.பி:
பிற மாநிலங்களைப் பொறுத்தவரை யார் வெல்வர் என்பதை ஓரளவுக்கு ஊகித்துவிட முடியும். ஆனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் 80 எம்பிக்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் உத்தரப் பிரதேசத்தில் யார் அதிக இடங்களில் வெல்கிறார்களோ அவர்களே மத்தியில் ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழல் உருவாகலாம் என்கிறார்கள்.
நரேந்திர மோடி தனிக்கவனம்:
இதனால் தான் இந்த மாநிலத்தில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் நரேந்திர மோடி. அங்கு தனது வலதுகரமான அமித் ஷாவை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளார். மேலும் உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் போட்டியிட நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது தவிர ராமஜென்ம பூமி விவகாரத்தையும் பாஜக மீண்டும் கையில் எடுத்துள்ளது. இதன்மூலம் உத்தரப் பிரதேசத்தில் இந்துக்களின் ஓட்டுகளை ஒருமுகப்படுத்தும் முயற்சியில் பாஜகவும் நரேந்திர மோடியும் ஈடுபட்டுள்ளனர்.
முஸ்லீம்களின் strategic voting:
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் சுமார் 20 தொகுதிகளில் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கப் போவது முஸ்லீம்களே. 2009ம் ஆண்டு தேர்தலில் பாஜக முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் கட்சியுடன் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி கூட்டணி அமைத்தது. பாபர் மசூதி இடிப்பின்போது முதல்வராக இருந்த கல்யாண் சிங்குடன் முலாயம் கூட்டணி சேர்ந்ததை ஆதரிக்காத முஸ்லீம்கள் strategic voting மூலம் பாஜக அல்லாத கட்சிகளுக்கு வாக்களித்தனர். எங்கெல்லாம் முலாயம் சிங்கால் காங்கிரசுக்கு பாதிப்பு வருமோ அங்கெல்லாம் காங்கிரசுக்கு வாக்களித்தனர்.
2009ல் காங்கிரஸ் வென்றது ஏன்?:
அதே நேரத்தில் எங்கெல்லாம் பாஜகவால் பிற கட்சிகளுக்கு பாதிப்பு வருமோ அங்கெல்லாம் பிற கட்சிகளுக்கு (காங்கிரஸ், முலயாம் சிங்கின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ்) வாக்களித்தனர். இதனால் தான் அந்தத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் 22 இடங்களைக் கைப்பற்றியது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 5 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு இங்கு 22 இடங்கள் கிடைத்தது தான் மத்தியில் அந்தக் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வர மிக முக்கிய காரணமாக அமைந்தது.
சிறுபான்மையினர் வாக்குகள்:
இந்த வாக்குகளை கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசால் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை என்பதால் முஸ்லீம்களின் வாக்குகள் முலாயம் சிங்குக்கும் மாயாவதிக்குமே அதிகமாக சென்றன.
இந் நிலையில் நரேந்திர மோடியை பாஜக வேட்பாளராக்குவதன் மூலம் உத்தரப் பிரதேசம் உள்பட நாடு முழுவதுமே சிறுபான்மையினரின் வாக்குகள் தனக்கு ஆதரவாக தானாகவே திரண்டுவிடும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.
திசை திருப்ப உதவும்:
மேலும் தேர்தலில் முக்கிய பிரச்சனையாக இருக்கப் போகும் மத்திய அரசின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியின் ஊழல்கள் விவகாரத்தைம் கூட, மதவாதமா- மதசார்பின்மையா என்று திசை திரும்ப மோடி உதவுவார் என்றும் காங்கிரஸ் கருதுகிறது. ஆட்சியின் மீதான மதிப்பீட்டை வைத்து கிடைக்கும் வாக்குகளை விட மதவாதமா- மதசார்பின்மையா என்ற விவாதம் மூலம் தனக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருதுகிறது.
கவலையில் முலாயம் சிங்:
இதனால் மிகவும் கவலையில் ஆழ்ந்திருப்பது முலாயம் சிங் யாதவ் தான். பிரச்சனை காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையில் என்றால் சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸ் பக்கம் போய்விடும் என்று அவர் அஞ்சுகிறார். இதனால் 2009ம் ஆண்டு நடந்தது போல காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடிக்கலாம் என்ற அச்சம் அவரிடம் உள்ளது.
இந் நிலையில் தான் முஸாபர்நகரில் கலவரத்தை முலாயம் சிங் தரப்பும்- பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவையும் திட்டமிட்டு நடத்தியதாகக் கூட காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. இந்த விவகாரத்தில் பிரச்சனையை வைத்து பாஜகவுக்கும் லாபம், நடவடிக்கை எடுத்த முலாயமுக்கும் லாபம் என்கிறார்கள்.
தப்புக் கணக்கானது:
ஆனால், முலாயம் போட்ட கணக்கு தவறிவிட்டதாகவே தெரிகிறது. முஸாபர்நகர் மதக்கலவரத்துக்கு முலாயம் தரப்பே காரணம் என்று டெல்லி இமாம் உள்ளிட்ட பலரும் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளதால், இஸ்லாமியர்களிடையே முலாயம் மீது எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியுள்ளது. மேலும் அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான ஆஸம் கானே முஸாபர்நகர் விவகாரத்தில் கட்சித் தலைமை மீது புகார் கூறியுள்ளார்.
மாயாவதியுடன் கூட்டணிக்கு ராகுல் முயற்சி:
இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் மோடியால் தனக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்பது காங்கிரஸ் எதிர்பார்ப்பு. அதற்காக ஓவர் நம்பிக்கையோடு நேரடியாக களத்தில் குதிக்காமல் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியுடனும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது.
மாயாவதியின் வலதுகரமான சதீஷ் மிஸ்ரா பலமுறை டெல்லி வந்து ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றுள்ளது இந்தக் கூட்டணி முயற்சிகளையே காட்டுகிறது.
40 இடங்களுக்கு குறி:
கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற 22 இடங்களிலும் பகுஜன் சமாஜ் அந்தக் கட்சியை ஆதரிப்பது, மற்ற 58 இடங்களில் பகுஜன் சமாஜுக்கு காங்கிரஸ் ஆதரவு தருவது என்பதே திட்டம் என்கிறார்கள். இந்தக் கூட்டணி மொத்தமுள்ள 80 இடங்களில் 40 இடங்கள் வரை பிடித்துவிட முடியும் என்பது இவர்களது நம்பிக்கை.
அப்படி நடந்தால்....:
உத்தரப் பிரதேசத்தில் தனித்தே 40 முதல் 50 இடங்களைப் பிடித்தால் தான் மத்தியில் ஆட்சிக்கு வரும் பாஜகவின் கனவு நிறைவேறும். இப்படிப்பட்ட நிலையில், மாயாவதியோடு சேர்ந்து முஸ்லீம்கள் ஆதரவுடன் எப்படியாவது 40 இடங்களைப் பிடித்துவிட்டால், மிச்சமுள்ள 40 இடங்களைத் தான் முலாயம் சிங்கும் பாஜகவும் பங்கு போட வேண்டிய நிலை வரும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
3வது அணி அல்லது...
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றியைத் தடுத்துவிட்டால் பிற மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் தானே மீண்டும் அரியணை ஏறிவிடலாம் என்று கருதுகிறது காங்கிரஸ். இல்லாதபட்சத்தில் தேர்தலுக்குப் பின் நிச்சயம் உருவாவகப் போகும் 3வது அணியில் யாரையாவது பிரதமர் பதவிக்கு வர வைத்து கொஞ்சம் காலம் ஆதரித்துவிட்டு, பாஜக கொஞ்சம் சுணக்கம் காணும் நேரத்தில், அந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முயலலாம்.
2 ஏட்டையாக்கள்...
பிரதமராக இருந்த சந்திரசேகர் அனுப்பிய 2 'எட்டையாக்கள்' தனது வீட்டுக்கு வெளியே உளவு பார்த்ததாக சொல்லி அவரது ஆட்சியை அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி கவிழ்த்த கதையை நினைத்துப் பார்க்கவும்.
2 ஏட்டையாக்களை வைத்தே ஆட்சியைக் கவிழ்த்த காங்கிரசுக்கு அரசியலை யாரும் சொல்லியா தர வேண்டும்?..