குஜராத்திற்கு ஏன் இரு கட்ட தேர்தல்?
டெல்லி: குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்துள்ளார்.
மொத்தம் 182 சட்டசபை தொகுதிகளே உள்ள குஜராத் சட்டசபைக்கு ஏன் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்ற வியப்பு ஏற்படுகிறது. 2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போதும் குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
இரு கட்ட தேர்தல்களுக்கு நடுவேயும் 4 நாட்கள் இடைவெளி விடப்பட்டது. அதேநேரம், 234 தொகுதிகளை கொண்ட தமிழகம், 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்களில் ஒரே கட்டமாகத்தான் தேர்தல்கள் நடந்துள்ளன. இத்தனைக்கும் கர்நாடகாவின் சில பகுதிகளில் நக்சலைட்டுகள் பிரச்சினையும் உண்டு.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவே ஆளும் நிலையிலும், ஒப்பீட்டளவில் குட்டி மாநிலமான குஜராத்திற்கு 2 கட்ட தேர்தல் இப்போது தேவையா, அந்த அளவுக்கு தேர்தலை சீர்குலைக்க வன்முறையாளர்கள் உள்ளனரா என்ற கேள்வி பொதுவான வாக்காளர்களிடம் எழுகிறது. சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் தென் மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதையே இது காட்டுகிறது.
குஜராத்தில் ஏன் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்ற கேள்விக்கு, தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி கூறுகையில், குஜராத்தில் மிக நீண்ட கடற்கரை உள்ளது. பாலைவனம் உள்ளது. இதுபோன்ற காரணங்களால்தான் இரு கட்டங்களாக தேர்தல் நடத்த தேவை உள்ளது. இமாச்சல பிரதேசம் மலைப்பகுதியாக உள்ளதால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துகிறோம். நில அமைப்புதான் இரு கட்ட தேர்தலுக்கு காரணம் என்றார் அவர்.