தினகரன் தரப்புக்கு பாஜக கொடுத்த சிக்னல்.. வருமானவரித்துறை ரெய்டின் பின்னணி
Recommended Video
டெல்லி: மீண்டும் சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை நுழையத் தொடங்கியிருக்கிறது. ' ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றியை வைத்துக் கொண்டு, ' மோடி எங்களுடன் சமசரம் ஆக முயற்சி செய்கிறார்' எனத் தவறான தகவலைப் பரப்புகின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.
அதைத் தவறு என்று சுட்டிக் காட்டவே மிடாஸ் நிறுவனத்துக்குள் நுழைந்திருக்கிறது ஐ.டி' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.
குக்கர் சின்னத்தை வைத்துக் கொண்டு ஆர்.கே.நகரில் தினகரன் காட்டிய ஆட்டத்தில் இருந்து ஆளும் கட்சி இன்னும் மீளவில்லை. அதிகார பலத்தை வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியாத கோபத்தை, இம்பொடன்ட் என கடுமையாக விமர்சித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. இந்த விமர்சனத்தால் கொதித்துப் போன அமைச்சர் ஜெயக்குமார், ' குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள். அவருக்கென்று எதாவது முகம் இருக்கிறதா?' எனப் பேட்டியளித்தார்.
திடீர் பல்டி
தன்னுடைய கருத்தால் விமர்சனம் எழுவதைக் கண்ட குருமூர்த்தியும், ' திறனற்றவர்கள் என நான் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. இம்பொடன்ட் என்றால் திறனற்றவர்கள் என்ற அர்த்தமும் உண்டு' என சமாளித்தார். இதற்கிடையில் என்ன நடந்ததோ, ' பண்பாளரான குருமூர்த்தி அப்படி பேசியிருக்கக் கூடாது' என பல்டி அடித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
திடீர் ஐடி ரெய்டு
இன்று பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியனோ, ' இதுவே அம்மா ஆட்சியாக இருந்திருந்தால் மான நஷ்ட வழக்கு பாய்ந்திருக்கும். எடப்பாடி பழனிசாமி பொறுமையாக இருக்கிறார்' எனப் பதில் அளித்தார். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் நேற்று படப்பையில் செயல்படும் மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ் மற்றும் சாய் காட்டன் உள்ளிட்ட சசிகலா உறவுகளுக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இப்படியொரு சோதனை நடக்கும் என சசிகலா உறவுகள் எதிர்பார்த்திருக்கவில்லை.
`ஃபார்மல் ரெய்டுதான்-சசிகலா கோஷ்டி
" வருமான வரித்துறையின் சோதனை இயல்பானதுதான். கடந்தமுறை திவாகரன, விவேக், அவருடைய மாமனார் பாஸ்கர், கிருஷ்ணபிரியா உள்பட அனைவர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. இந்தச் சோதனையில் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. அந்தநேரத்தில் மிடாஸ், ஜாஸ் சினிமாஸ் உள்பட அனைத்து நிறுவனங்களிலும் ரெய்டு நடந்தது. இந்தச் சோதனையின்போது கிடைத்த ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்து வந்தனர். இதில் சில சந்தேகங்கள் இருப்பதால்தான் மீண்டும் சோதனை என்ற பெயரில் வந்துள்ளனர். மிடாஸ் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிபார்ப்பதற்காகத்தான் இந்த சோதனை. ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு நிலவரங்கள் மாறிவிட்டன. அதிகாரிகள் நடத்தும் இயல்பான சோதனைகள்கூட சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது" என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.
அரசியல் லாபம்!
இதுகுறித்து தமிழக பா.ஜ.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " சசிகலா குடும்பத்தை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சொல்லப் போனால், ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு மோடியுடன் சமரசம் ஏற்படுத்திக் கொள்ள சசிகலா கோஷ்டிகள் விரும்புகிறது. ' எங்கள் பின்னால்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள்' என்பதைச் சுட்டிக் காட்டி, மீண்டும் இரட்டை இலையைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்த சமரசத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் உடன்படவில்லை. பொதுவாக, வருமான வரித்துறை அதிகாரிகள் ஒருமுறை சோதனையில் ஈடுபட்டுவிட்டால், அடுத்த 2 ஆண்டுகளுக்கு அமைதியாக இருப்பார்கள். இப்போது உடனே நடத்துகிறார்கள் என்றால், தினகரன் தரப்பினரின் அதீத பேச்சுக்கள்தான்.
பாஜகவை வளர்க்க வேண்டும்
எங்களுக்கு கன்னியாகுமரி தவிர வேறு எங்கள் பெரிதாக அடித்தளம் இல்லை. அரசியல் அதிகாரத்தில் பின்தங்கிய மக்களை ஒருங்கிணைத்து செல்வாக்கை வளர்த்துக் கொள்ள பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் போட்டியில் சசிகலா குடும்பத்தை வீழ்த்துவது எங்களின் முக்கியமான அஜெண்டா. தமிழ்நாட்டில் அரசியல்ரீதியாக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் வந்தோம். இந்த முயற்சியில் தோற்றுப் போக நாங்கள் விரும்பவில்லை. இந்தக் கருத்தில் அகில இந்திய தலைமையும் உறுதியாக உள்ளது.
எடப்பாடி தலைமைக்கு வரவேற்பு
ஆர்.கே.நகர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வாங்கிய 27 சதவீத வாக்குகளே போதுமானது. அவருடைய தலைமைக்கு விழுந்த ஓட்டுக்களாகத்தான் பார்க்கிறோம். வரக் கூடிய தேர்தல்களில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதற்கே வாய்ப்பு அதிகம். தினகரன் தரப்பில் இருந்து எத்தனை தூது வந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. வருமான வரித்துறை ரெய்டுகள் தொடரும்" என்றார் விரிவாக.