காங்கிரஸ் எம்.பிக்கள் என்னை பிரதமராக தேர்வு செய்தால் ஏற்றுக் கொள்வேன்: ராகுல்காந்தி
டெல்லி: தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் தன்னை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட மாட்டார் என அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் அறிவித்தார்.
ஆனாலும், கட்சியினர் மத்தியில் ராகுல் பிரதமார் வேட்பாளராக முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் அமேதி தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலுக்கு முன்னர் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிப்பது ஜனநாயக நடைமுறை ஆகாது, மாறாக அது வெறும், தனி நபரை பிரபலப்படுத்தும் முயற்சியாகும்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், அதன் பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் என்னை பிரதமராக தேர்வு செய்தால் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள தான் தயாராக இருக்கிறேன்.
கட்சிக்குள், பிரதமராவது யார் என தேர்வு செய்வது எம்.பி.க்கள் உரிமை. அதை அவர்களுக்கு அளிக்க வேண்டும். மன்மோகன் சிங், காங்கிரஸ் எம்.பி.க்களால் தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
அதே போல் என்னையும் தேர்வு செய்தால் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன்" என்றார்.