என்னமா யோசிக்கிறாங்கப்பா.. அமேசான் நிறுவனத்திடம் நூதனமாக ரூ.70 லட்சம் அபேஸ்.. பெண்மணி கைது
பெங்களூர்: ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானை நூதன வழியில் ஏமாற்றிய மோசடி பெண்மணி பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூர் நகரின் ஹொரமாவு பகுதியில், தனது கணவரோடு, வசித்து வருபவர் 32 வயது பெண்மணியான தீபன்விதா கோஷ். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அடிக்கடி ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வழக்கமுடையவர். அப்போதுதான் அவருக்கு ஒருநாள் திருட்டு புத்தி வேலை செய்தது.
புதுத் திட்டம்
பல்வேறு பெயர்களில் ஆர்டர்கள் செய்து, பொருட்களை வாங்கிக்கொண்டு, பிறகு, மோசமான பழைய பொருளை அமேசானுக்கே திருப்பி கொடுத்துவிடலாமே என்ற திட்டம் தீட்டியுள்ளார் அவர்.
விலை உயர்ந்த பொருட்கள்
இவ்வாறு, 104 முறை தீபன்விதா கோஷ் பல்வேறு பெயர்களில் ஆன்லைனில் பொருட்களை வாங்கியுள்ளார். இதில் உயர்ரக செல்போன்கள், எஸ்எல்ஆர் கேமராக்கள், டிவிக்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவை இதில் அடங்கும்.
திருப்பியனுப்புவாராம்
ஆனால் பொருட்களை வாங்கிய அடுத்த 24 மணி நேரத்திலேயே அவை சரியில்லை என கூறி, திருப்பியனுப்பி பணத்தை மீண்டும் திரும்ப பெற்று வந்துள்ளார். ஆனால் பொருளை திருப்பி தரும்போது, ஏதாவது பழைய பொருளை கொடுத்துள்ளார். புதிதாக வாங்கியதை வெளியே விற்று, லாபம் பார்த்துள்ளார்.
பரிசோதித்து பார்க்கவில்லை
அமேசான் நிறுவன விதிமுறைப்படி, திருப்பி தரப்படும் பொருளை பரிசோதிக்கும் வழக்கம் இல்லை என்பதால், சுமார் 1 வருடத்திற்கு இவ்வாறு அந்த பெண் ஏமாற்றி வந்துள்ளார். இதற்காக வெவ்வேறு நகரங்களில், வெவ்வேறு முகவரிகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
ரூ.70 லட்சங்கள்
சந்தேகத்தின்பேரில், அமேசான் நிறுவனத்தின் அதிகாரி கொடுத்த புகாரை தொடர்ந்து பெங்களூர் ஹென்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தீபன்விதா கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆன்லைன் மோசடி வழக்கில் தீபன்விதா கோஷை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். இவர் மோசடி செய்த பொருட்களின் மதிப்பு ரூ.69.91 லட்சம் அளவுக்கு இருக்குமாம்.