அன்பு எப்போதுமே அனாதையில்லை.. சிறுத்தைக்கு ராக்கி கயிறு கட்டி நெகிழ வைத்த பெண்!
ராஜஸ்தானில் பெண் ஒருவர் சிறுத்தைக்கு ராக்கி கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்: ரக்ஷாபந்தன் தினத்தையொட்டி சிறுத்தைக்கு பெண் ஒருவர் ராக்கி கட்டிய புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதர பாசத்தைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ரக்ஷாபந்தன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டி விட்டு, அவர்கள் நீண்ட ஆயுளுடன், செல்வ வளத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்வார்கள். அதற்கு பதில் மரியாதை செய்வதுபோல், சகோதரர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் சகோதரிகளுக்கு பரிசுகளைத் தருவார்கள்.
அந்தவகையில் இந்தாண்டிற்கான ரக்ஷாபந்தன் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. உடன்பிறந்தவர்கள் மட்டுமின்றி, தங்கள் அன்புக்குரிய சகோதரர்கள் அனைவருக்கும் ராக்கி கட்டி பெண்கள், இதனைக் கொண்டாடினார்கள்.
ராஜஸ்தானில் சற்று வித்தியாசமாக பெண் ஒருவர், சிறுத்தை புலிக்கு ராக்கி கட்டி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வரும் இந்தப் புகைப்படம் பார்ப்பவர்களை அன்பில் நெகிழ வைக்கும் வண்ணம் உள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 அணைகள் கட்டும் முடிவில் ஆந்திரா! ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஸ்டாலின் கடிதம்!
சிறுத்தைக்கு ராக்கி
இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், அமர்ந்திருக்கும் சிறுத்தைக்கு, அதன் முன்னங்கால்களை கைகளாகக் கருதி ஒரு பெண்மணி ராக்கி கட்டிவிடுகிறார். அந்த சிறுத்தையும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக அமர்ந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
அன்பு ஜெயிக்கும்
"இந்தியாவில் காலங்காலமாக மனிதர்களும், விலங்குகளும் காடுகளின் மீது நிபந்தனையற்ற அன்புடன் இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். ராஜஸ்தானில், ஒரு பெண்மணி, நோய்வாய்ப்பட்ட சிறுத்தைக்கு ராக்கி கட்டி, அன்பு மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த எதிர்பார்ப்பற்ற, எல்லையில்லாத அன்பைக் காட்டும் பெண்ணிடம், அந்த சிறுத்தையும் எதுவும் செய்யாமல் அன்பை முற்றிலுமாக ஏற்று கொண்டது" என அந்த டிவீட்டில் சுசாந்தா நந்தா குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை
சம்பந்தப்பட்ட சிறுத்தை வெகுகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. சிகிச்சையில் இருக்கும் அந்த சிறுத்தையை, வனத்துறையிடம் ஒப்படைக்கும் முன்னதாகத் தான் இப்படி ராக்கி கட்டி வழியனுப்பி உள்ளார் அப்பெண். ராக்கி கட்டும் அப்பெண் யார், அவரது பெயர் என்ன என்பது குறித்து தெரியவில்லை.
காடு வரை நீளும் அன்பு
வீடுகளில் வளர்க்கப்படும் பூனை, நாய், பசு போன்ற விலங்குகளை, நம் வீட்டில் ஒருவராகவே பாவிக்கும் குணம் நம் மக்களிடையே அதிகம். ரேஷன் கார்டில் மட்டும்தான் பெயர் இருக்காது.. மற்றபடி அந்த விலங்குகளுக்கு வீட்டில் உள்ள அனைவரையும் மாமா, அத்தை, அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அக்கா, அண்ணன் என எல்லோரையும் உறவுமுறைகளாகவே பழக்கப்படுத்துவார்கள். தற்போது அந்த அன்பு இன்னமும் தன் எல்லைகளை விரிவாக்கி, காட்டு விலங்குகள் வரை நீண்டிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளது.