சாப்பாட்டுக்கு வழியில்லை... 14 வயது மகளை ரூ 50 ஆயிரத்துக்கு விற்க முற்பட்ட தாய் கைது
அவுரங்காபாத்: மராட்டிய மாநிலத்தில் தனது 14 வயது மகளை ஐம்பதாயிரத்துக்கு விற்க முற்பட்ட தாய் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள பர்பானி சங்கர் நகர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் மனைவி சய்யாபாய் (வயது40). இத்தம்பதியினருக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். முறையான வருமானம் இல்லாததால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது.
இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் சய்யாபாயின் உறவுபெண்ணான ஜெயாபாய். தனக்கு ஏற்கனவே தெரிந்த 3 பேரை சய்யாபாயிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் அவர்.
அப்போது, ‘அவர்கள் 3 பேரும் உனது இளையமகளை பார்த்து உள்ளனர் அவளை விலைக்கு வாங்க ஆர்வமாக உள்ளனர்' என சய்யாபாயிடம் தெரிவித்துள்ளார் ஜெயாபாய். மேலும், அவளை மணம் புரிந்து கொள்ள உனக்கு அவர்கள் ரூ 50 ஆயிரம் பணம் தருவார்கள் என ஆசையும் காட்டியுள்ளார்.
ஜெயாபாயின் பேச்சை நம்பிய சய்யாபாய் இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு அந்த பெண்ணும் அவரது தந்தையும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தனது தந்தையின் உதவியுடன் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார் சிறுமி. புகாரின் மீது நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் சய்யாபாய், ஜெயாபாய் உட்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.