கணவருக்காக 4 இளைஞர்களுடன் சண்டையிட்ட வீரப்பெண்... உ.பி. அரசு ரூ. 1 லட்சம் பரிசு அறிவிப்பு
மீரட்: தனது கணவரைக் காப்பாற்றுவதற்காக சாலையில் நான்கு இளைஞர்களுடன் தைரியமாக சண்டையிட்ட இளம்பெண்ணுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது உத்திரப்பிரதேச அரசு.
சமீபத்தில், உத்திரப்பிரதேசம் மாநிலம் கச்சேரி பில் பகுதியில் தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார் மம்தா என்ற இளம்பெண். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதியது பைக். இதில் ஆத்திரமடைந்த காரில் வந்த நான்கு பேர், பைக்கை ஓட்டி வந்த மம்தாவின் கணவரைத் தாக்கத் தொடங்கினர்.
தனது கணவரைக் காப்பாற்றுவதற்காக அந்த நான்கு பேருடனும் மம்தா சண்டையிட்டார். மம்தாவின் தாக்குதலில் பயந்து ஓடி விட்டனர் அந்த நான்கு பேரும். மம்தாவின் இந்த வீரச் செயல் ஊடகங்களில் வெளியானது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய காரில் வந்த நால்வரில் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மம்தாவின் தைரியத்தைப் பாராட்டி உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.
ஆனால், அரசு வழங்கும் ரொக்கப்பரிசு தனக்குத் தேவையில்லை என அறிவித்துள்ள மம்தா, தங்களுடன் தகராறில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைவர்களில் ஒருவர் சுதந்திரமாக திரிவதாகவும், அவர் சமாஜ்வாதிக் கட்சி முக்கிய தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மம்தா மிரட்டல் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications